நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, மே 20, 2011

நீயில்லாத பயணங்களில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நீயில்லாத பயணங்களில்
முழு இருக்கையில்
முக்கால் இருக்கையை
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்

எவனையோ
அலைபேசியில் அழைத்து
ஆரிப் நல்லவனென
நற்சான்றழிக்கிறான்

இரால் வடையையும்
இஞ்சிக் கோப்பியையும்
சத்தம் கேட்குமாறு
சப்பித் தின்றுவிட்டு

உன்னைச் சுமந்த
என் தோள்களில்
தூங்கிப் போகிறான்

பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை வாய் எச்சியை
என்னில் துடைத்துக்கொண்டே
மீண்டும் அலைபேசுகிறான்

யாரோ ஒருத்தியையும்
அவள் தாயையும்
தமக்கையையும்
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்

எதுவுமே உறைக்காமல்
உனக்குப் பிடித்த
சாளரக் கம்பிகளில்
முகம் புதைக்கிறேன்

என்னைப் போலவே
உணர்வற்று
பள்ளம், மேடுகளில்
ஊர்கிறது பேருந்து

0 கருத்துகள்: