நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

செவ்வாய், மே 31, 2011

நேயம்



தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

நன்றி:
#கீற்று

திங்கள், மே 30, 2011

பிச்சை



பிச்சைக்காரர்களுக்கோ
போர்
இடப்பெயர்வு
ஊனம்
இயலாமை
கந்தலுடை மனைவி
பசியோடிருக்கும் மகன்
பருவமெய்திய ஏழாவது மகளென
ஆயிரம் காரணங்கள்
பிச்சையெடுக்க

நடத்துநர்களுக்கோ
ஒன்றே ஒன்று தான்
“சில்லறையில்லை”

கற்பிழந்த கதை


விடுமுறையில் கூட

வேலைக்குச் சென்றாய்…

உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்


அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்


காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்


கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்


ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்


அதுதான்,
“நீ கற்பிழந்ததையும் – உன்
கடவுள் கைவிட்டதையும்”

வியாழன், மே 26, 2011

அக்குரோணி: மன்னார் அமுதனின் கவிதை நூல் -- நன்றி: மருத்துவக் கலாநிதி. எம்.கே.முருகானந்தன்


மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.

இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது. பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.

இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன் இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.

தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.

‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார்.

இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

புதன், மே 25, 2011

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்”

படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியால் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன.

இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர்.

அத்தகைய ஆர்வமும், படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட இளைஞன் கலாமணி பரணீதரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பே “மீண்டும் துளிர்ப்போம்”. பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசியப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகிய தனது சிறுகதைகளைத் தொகுத்து “தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் சிறுசஞ்சிகைகளே” எனும் வாக்கிற்கு வலிமை சேர்த்திருக்கின்றார். பரணீதரன் சிறுகதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, இசை நாடகம் என பல்கலையிலும் தன் பன்முக ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ”இலக்கியமும் எதிர்காலமும்“ எனும் கட்டுரைத்தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். கதையாசிரியரால் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கிய மாசிகையான ஜீவநதி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளைகளைப் பரப்பி வற்றாத நதியாக வலம் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மீண்டும் துளிர்ப்போம் - சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 13 கதைகளும் சமூக விமர்சங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தனிமனித மாற்றத்தின் ஊடாக குடும்ப மாற்றத்தையும் அதனூடாக சமூக மாற்றத்தையும் வலியுறுத்தும் கதாசிரியர், உயிரிலும் மேலானது, பொய்முகங்கள் போன்ற கதைகள் சாதித் தடிப்பானது எவ்வாறு பெற்ற பிள்ளைகளுக்கும், அவர்களது ஒன்றுமறியா பால்ய நண்பர்களுக்கும் கூடக் குடமுடைத்து கொள்ளி வைத்து விடுகிறது என்பதை

“டேய்! எனக்கு எந்தக் கதையும் சொல்லாதை, முடிவாக் கேக்கிறன். அவளை விட்டுட்டு நீ வாறியோ? அப்படி வாராய் என்றால் உன்னை வெளியாலை எடுக்கிறம்” -- (உயிரிலும் மேலானது)

“நாலு எழுத்துப் படிச்சவுடனே எங்கட வீடுகளுக்குள்ளே வரப்பாக்குதுகள். என்ரை வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்க விடுவனே... என்ன தந்திரமாக அதுகளைக் கடத்தி விட்டேன் பாத்தியோ!” - (பொய்முகங்கள்)

செவ்வாய், மே 24, 2011

நான் படித்த அக்குரோணி


குறிப்பு: நான் படித்த அக்குரோணி  -- நன்றி கவித்தோழன் முகமட் பஸ்லி
கணிணியுகம் என்று வர்ணிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் என்னதான் எல்லாத்துறைகளும் கணிணிமயப்படுத்தப்பட்டு இயந்திரங்களின் துணைகொண்டு இயங்கிக் கொண்டிருந்தபோதிலும் மனிதனின் வேலைப்பளு குறைந்ததாகத் தெரியவில்லை. இன்று இயந்திரங்களிலும் வேகமாக மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லவேண்டும். இவ்வாறு உலகின் சுழற்ச்சிக்கேற்ப முழு முயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் மனதுக்கு நல்ல ஓய்வும் தேவைப்படுகிறது. சிறந்த ஓய்வு கிடைக்கும்போதே மறுநாள் அவனால் புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை ஆரம்பிக்க முடியும். இதனால்தான் மனிதன் பெரிதும் அமைதியை நாடுகிறான். மன அமைதியைப் பெறுவதற்காக அவன் எத்தனையோ முயற்சிகளை எடுக்கிறான், எங்கெங்கெல்லாமோ செல்கிறான். இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, ஆசை, பொறாமை இப்படி பலவகை அம்சங்களினால் கனத்து நிறம்பும் மனதுக்கு கவிதைகள் நல்ல ஆறுதலை வழங்குகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது உண்மை என்றே நான் கருதுகிறேன். இந்த ஆறுதல் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்துள்ளது. அன்மையில் மன்னார் அமுதனின் அக்குரோனி கவிதைத் தொகுதியை வாசிக்கும் போது மீண்டும் ஒரு முறை இந்த உணர்வினை அனுபவிக்கக் கூடியதாயிருந்தது.


கவிதை என்றால் என்ன? என்பதில் மூத்த பெரும் கவிஞர்களிடத்திலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தமக்குரிய பாணியில் வித்தியாசமான விளக்கங்களைத் தருவது கொண்டு  கவிதைக்கு பொதுவான ஒரு வரைவிலக்கணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ கவிதை என்னும் போது அதில் கட்டாயமாக கவிநயம் இருக்கவேண்டும் வெறுமனே வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டு போவதால் அது கவிதையாகிவிடாது. கவிதை காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் பல வடிவங்களால் தன்னை அழங்கரித்துக் கொள்கிறது. மரபு, புது, நவீனம், ஹைக்கூ என்று எந்த வடிவில் கவிதைகள் எழுதப்பட்டாலும் அதில் பொதிந்திருக்கும் கவித்துவ அழகினைப் பொறுத்தே அவை வாசகர் மனதில் இடம்பிடிக்கின்றன. சில கவிதைகளை சந்தங்கள் அழகுபடுத்துகின்றன.

மறுபக்கம் – பாலியல்


மதுவோடும் மாதோடும்
சூதாடும் மன்மதனின்
கதையெங்கும் காமம் தெறிக்கும்

பகலென்ன இரவென்ன
படுக்கைக்கு போய் விட்டால்
விரல் பத்தும் தேகம் கிழிக்கும்

நாடோடி போலாகி
தேடோடிப் பெண் சுகத்தை
எழுத்திலே கருக விடுவான்

கோடிட்டுக் கோடிட்டுக்
கோமானே அவனென்று
போற்றியவன் படித்துக் கெடுவான்

பாலியலின் பலபக்கம்
அறிந்தவனாய்ப் பகட்டுபவன்
நாளொன்றில் மணமுடிப்பான்

ஊசியிலே நுழையாத
நூலொன்றைக் காவியவன்
இல்லறத்தில் விரதமென்பான்

போருக்கு ஆகாத
வாளொன்றை அழகிடையில்
அணிதற்கு அவள் மறுப்பாள்

உலகினிலே பரத்தைகளை
உறவினிலே வென்றவனை
உற்றதுணை தோற்கடிப்பாள்

வெள்ளி, மே 20, 2011

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்

சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்

பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…

தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
முழு இருக்கையில்
முக்கால் இருக்கையை
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்

எவனையோ
அலைபேசியில் அழைத்து
ஆரிப் நல்லவனென
நற்சான்றழிக்கிறான்

இரால் வடையையும்
இஞ்சிக் கோப்பியையும்
சத்தம் கேட்குமாறு
சப்பித் தின்றுவிட்டு

உன்னைச் சுமந்த
என் தோள்களில்
தூங்கிப் போகிறான்

பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை வாய் எச்சியை
என்னில் துடைத்துக்கொண்டே
மீண்டும் அலைபேசுகிறான்

யாரோ ஒருத்தியையும்
அவள் தாயையும்
தமக்கையையும்
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்

எதுவுமே உறைக்காமல்
உனக்குப் பிடித்த
சாளரக் கம்பிகளில்
முகம் புதைக்கிறேன்

என்னைப் போலவே
உணர்வற்று
பள்ளம், மேடுகளில்
ஊர்கிறது பேருந்து

நீயற்ற தனிமைப் பயணத்தில்…


மலையகத்தின்
உறை குளிரில்

தோள்களில் சாய…
கைகளைப்
பிணைத்துச் சூடேற்றி…
தலைமுடி கோதி
காதருகே முடி சுழற்றி

காதலோடு
கழுத்தில் முத்தமிட…
எவரும் இங்கு தயாரில்லை

இடையிடையே
நாசி தொடும்
மண் மணத்தில்
உனை நினைக்க

நாம் உச்சரிக்க மறந்த
வார்த்தைகளை மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறது
நம் காதல்

வியாழன், மே 19, 2011

அக்குரோணி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


மன்னார் அமுதன் எழுதிய அக்குரோணி என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் விட்டு விடுதலை காண் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே மன்னார் எழுத்தாளர் பேரவை வெளியீடாக, 86 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 50 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தொகுதியில் தமிழ்மீது கொண்ட பற்று, மானிட நேயம், ஆன்மீகம், காதல், சமூகம், தனி மனித உணர்வுகள், போர்ச்சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன. கவிஞர் மன்னார் அமுதன் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் போன்ற இரு வடிவங்களிலும் தனது கவிதை உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஊரின் பெயரையும் இணைத்து மன்னார் அமுதன்  என்ற பெயரில் எழுதி வருகின்றார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளர்கள் வரிசையில் மன்னார் அமுதனுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது.

'இலக்கிய வடிவங்களில் ஒரு மொழியின் உச்சத்தை உணர்த்தக் கூடியது கவிதையே. கவிதையைச் சிறப்பாகக் கையாளக் கூடிய கவிஞர்களும் உள்ளனர். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரம் உள்ள கவிஞர்களும் உள்ளனர். கவிதையை முழு ஆக்கத்திறனோடு படைக்க முயலும்போது அம்முயற்சி வெற்றி பெறும். உள்ளார்ந்த ஆக்கத்திறனைக் கலைத்துவத்தோடு வெளிப்படுத்தும் போது சிறந்த இலக்கியப் படைப்புக்கள் உருவாகும். அதற்குப் பரந்த வாசிப்பும், பயிற்சியும் உறுதுணையாக அமையும்.

அதென்னப்பா அக்குரோணி – அலசுகிறார் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


பத்து வார்த்தைகளில் நம்முடன் பேசும் ஒரு நல்ல கவிதை நம்மில் ஏற்படுத்தும் சிந்தனைகளை எழுதுவதற்கும் அதனை நயந்து பேசுவதற்கும் பத்தாயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. வாசகனின் சிந்தனையை எவ்வளவு தூரத்துக்கு ஒரு கவிதை பரத்தி விசாலித்துச் செல்கிறதோ அந்தளவுக்கு அந்தக் கவிதை சிறப்புப் பெற்று விடுகிறது. நாம் படித்த ஒரு நல்ல கவிதையின் சில வரிகள், சில வார்த்தைகள், அதன் ஞாபகங்கள் இன்னும் நம் மனத்துள் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்றால் அது அந்தக் கவிதைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும் கிடைத்து விட்ட வெற்றி என்று தயங்காமல் சொல்லி விடலாம்.

ஒவ்வொரு நல்ல கவிதைக்கும் அழகான உடலும் உற்சாகமான உறுப்புகளும் தெளிவான பேச்சும் நளினம் கொண்ட கவர்ச்சியும் அமரத்துவம் பெற்ற சுவாசமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அவ்வாறாக கவிதைகள் ஒரு போதும் மறக்கப்படுவதுமில்லை, மரித்துப்போவதும் இல்லை. அவற்றை ஒளித்து வைக்கவும் முடிவதில்லை, ஒழித்துக் கட்டவும் முடிவதில்லை. அவை சாகா வரம் கொண்டு சாசுவதமாக வாழும் வரத்தைத் தாமாகவே பெற்றுக் கொள்வதுடன் தன்னைப் படைத்த கவிஞனையும் காலாதி காலத்துக்கும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. இதைத்தான் “எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று கண்ணதாசன் குறிப்பிட்டார்.

இவ்வாறான