நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

செவ்வாய், ஜனவரி 29, 2013

கோயிலும் கடவுளும்


அந்நாட்களில்
ஏழைகளின் 
கூடாரமாயிருந்தது
கோயில்

கடவுள்
காவலாயிருந்தார்
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்

அப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்

நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்

கடவுள் அங்கேயே 
காவலாயிருந்தார்

தன்னை
நியாயப்படுத்த
எல்லாவற்றையும்
கற்றுத் தந்திருந்தது மதம்

மேலானவர்களைத் துதித்தோம்
கீழானவர்களைத் துவம்சித்தோம்
தோற்றம் மாறியிருந்தார்
கடவுள்

தூண்களைக் கட்டியும்
தூசிகள் தட்டியும்
பாரம்பரியக் கோவிலைப்
பராமரித்தோம்
மழைக்கு ஒதுங்கிய 
மக்களையும்
மஞ்சள் படிந்த 
கடவுளையும் வெளியேற்றிவிட்டு

   -- மன்னார் அமுதன்

வியாழன், ஜனவரி 24, 2013

நானற்ற பொழுதுகளில்


நீ
முட்டியை மடக்கி
முகத்தில் குத்தியதில்
முத்திரை குத்தப்பட்ட
கடிதத்தைப் போலவே
கிழிந்து போயிருந்தது
என் தாடை

மருந்திடச் சொல்கிறாய்
முட்டிக்கு

பெண்ணென்றான பின்
பெரிதாய் என்ன செய்திடுவாய்
எல்லா இராணுவங்களும்
செய்ததைவிட

அடுப்படியில் கூட
எனக்கான
கருத்தோ கொள்கையோ
கருக்ககட்டக் கூடாதெனும்
கொள்கையோடே வாழ்கிறாய்

விதிமுறைகளை
என்னிடமும்
விதிவிலக்குகளை
எல்லோரிடமும்
பேசுபவனே

எழுதி முடிக்கப்பட்ட
கவிதையிலிருந்து
தூக்கி வீசப்பட்ட
சொற்களைப் போலவே
நிராகரிக்கப்பட்டிருப்பாய்
நானற்ற பொழுதுகளில்

செவ்வாய், ஜனவரி 22, 2013

தேவதைகளின் தனிமை


நீயென்னைத் 
தனித்திருந்த
நாட்கள் நான்கும்
நரகங்களாகிப் போயின

பார்க்கும் பொம்மைகளில் 
கூட நிழலாடியது
உன் முகம் 

அதிகாலை அணைப்பும்
முத்தமும் சிணுங்கலும்
எதுவுமற்று விடிந்திருந்தது
வாழ்க்கை

உன்னை வந்தடைந்த
ஐந்தாம் நாள் காலையில்
ஊர்க்குருவிகளோடும்
ஓட்டுப்பல்லிகளோடும்
தோட்டத்துப் பூக்களோடும்
பேசிக்கொண்டிருந்தாய்

மனிதர்கள் அற்ற
தனிமைப் பெருவெளியில்
நீ
மகிழ்ச்சியோடு
மட்டுமேயிருந்தாய்

கண்டவுடன்
பொம்மைகளைப் புறமொதுக்கி
கட்டிக்கொண்டாய்

அக்கணத்தில் 
அர்த்தப்படுத்தியிருந்தாய்
என் 
வாழ்க்கையையும்
தனிமையையும்

திங்கள், ஜனவரி 21, 2013

யுத்தசாட்சி - 1


மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம்சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்

யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே

எப்படியிருக்கிறாயென
எவரும் கேட்பதில்லை
எத்தனை முறையென்றே
கேட்கிறார்கள்

உடல் கிழிந்து
உயிர் கருகிய நாட்கள்
எத்தனை என்று
தெரியவில்லை

முள்முடிகள் குத்தியதில்
முட்டிக்கால் தாண்டியும்
ஓடிக்கிடக்கிறது இரத்தம்
எத்தனை பேரென்று
எண்ணவில்லை

காடையர்கள் 
பகிர்ந்துண்ட
கடைசி அப்பத்தைப் போல்
நானும் சிதறிக்கிடக்கிறேன்
எத்தனை முறையென்றும்
நினைவிலில்லை 

கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி 
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி 
காத்திருப்போரிடம் கேட்கிறேன்
“உணவுப் பொதிகளை 
வைத்திருப்போரே 
உங்களில் பாக்கியவான்கள்.
அவர்களுக்கு 
நான் சித்தமாயிருக்கிறேன்”

ஞாயிறு, ஜனவரி 20, 2013

கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்



கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்

என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.

அவனும் நானும்
ஆணாகவே இருந்தோம்
இருந்தும்
அவன் மேன்மையானவனானான்

திருடனென்றாலும்
உமக்கு
வலப்பக்கம் வீற்றிருக்கும்
திருடனாய்
அவன் மேன்மையானவனானான்

கடைச்சரக்கா இலக்கியமென
காணுமிடமெலாம்
பேசித் திளைப்பதில்
அவன் மேன்மையானவனானான்

எனது வாயை
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள்
அவன் மேன்மையானவனென

கலாச்சார உடையில்
வெள்ளையும் கறுப்புமான
மேன்மையானவனே

தயக்கம் வேண்டாம்
சேலையும் கலாச்சார உடைதான்
ஒருமுறை அணிந்துபார்
அழகாய்த்தானிருக்கும்

கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்

என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.