நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

புதன், ஜூன் 29, 2011

வா மணப்போம் விதவை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்

ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக்கியெம்
பூவையும் பொட்டையும்
இழந்தோம் - நம்வீட்டு
பூவைக்கு பூவைப்பார் யார்

புண்ணதுவே புண்ணாக
இருக்கட்டும் நெஞ்சத்தில்
மண்ணுக்காய் இல்லாமல்
மாண்டவென் தோழர்க்காய்
வென்றே தரவேண்டும்
விரைவாக சந்ததியை
வா மணப்போம் விதவை

இறுதித் தருவாயில்
உயிர்நீத்த உடற்கெல்லாம்
சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க்
கிடந்த உடலேறிச்
சுகம்கண்ட காடையரின்
பண்பாட்டைப் பார்த்தே பழகு

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட பூமியினை
பூண்டோடு அழித்துப்
புன்னகையைச் சீரழித்தீர்
மாண்டோ போனோம்
மறவர்நாம் - வடலிகள்
மீண்டும் வானுயரும்

நன்றி:
# பொங்குதமிழ்

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
வேதனையாக இருக்கிறது.

alex paranthaman சொன்னது…

நன்றி ஐயா

முனைவென்றி நா சுரேஷ்குமார் சொன்னது…

வடலி என்பதற்கு பொருள் என்ன அண்ணா?

ஒரு வகையான பறவையா? அல்லது தேக்கு மரம் போல அதுவும் ஒரு மரமா?