நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

புதன், ஜூன் 01, 2011

மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே

நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து

சென்றேன் அந்தச்
செம்மொழி அருகில்

வந்தனம் என்றேன்
வாய்மொழி இல்லை

கண்டும் காணாமல்
நிற்காமல் செல்லுமிவள்
நிலவின் மகளோ

நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்
தீண்டாமல் செல்கிறாளே
நீரின் உறவோ

தொடர்ந்தேன் பின்னால்
தொழுதேன் கண்ணால்

அமர்ந்தேன் அந்த
அமிர்தம் அருகில்

**

தாயின் கையைத்
தட்டி எழுந்தவள்
தாமரைப் பூக்களாய்
வெட்டி மலர்ந்தாள்

“போதும் போதும்”
போகலாம் என்ற
அன்னையை முறைத்து
அருகினில் வந்தாள்

போறோம் நாங்க
நீங்களும் போங்க

இதழ்கள் பிரித்து
இருவரி உதிர்த்து
அரிவரிச் சிறுமியாய்
மறைந்தவள் போனாள்

***

சிந்தையை விட்டுச்
சிதற மறுக்கும்
மங்கையைக் கண்டு
மாதங்கள் இரண்டு

மறுபடி அவளைக்
காணும் நாள் வரை
மனதினை வதைக்கும்
கனவுகள் திரண்டு

***

தேய்பிறையோ,
வளர்பிறையோ
தெரியாத நிலவு அவள்

அடைமழையோ
இடி புயலோ
அறியாத அல்லி அவள்

***

புன்னகையின் தேவதையாய்
பூமியிலே பிறந்தவளே
என்னபிழை நான் செய்தேன்
ஏனென்னை வெறுக்கின்றாய்

காணாமல் நானிருந்தால்
கணமொன்றில் இறந்திடுவேன்
நோய்கொண்டு போகுமுன்னே
நானுன்னைக் காண வேண்டும்

***

என்
பாசமுள்ள பூமகளே

வாசலிலே கண்டவுடன்
வாங்கப்பா என்காமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்டு
அம்மா அம்மாவென
அரற்றி அழுதவளே

அச்சம் வேண்டாம்

பிச்சைக்காரனோ
பிள்ளை பிடிப்பவனோ
அச்சம் அறியாத – இளம்
ஆண்மகனோ நானில்லை

அப்பா…
நானுன் அப்பா

சீதனச் சீரழிவால்
சிதறிய நம் குடும்பம்
சீதேவி உன்னாலே
சீராக வரம் வேண்டும்

வாசலிலே கண்டவுடன்
வாங்க என்று சொல்லாமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்ட
என்
செல்ல மகளே -உன்னைச்
சீராட்ட வரம் வேண்டும்

================
கவிதையின் ஒலிப்பதிவு: இங்கே
==================

குறிப்பு:

மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதல் லெப்பை அவர்களை நினைவுறுத்தும் முகமாக சக்தி பண்பலையில் இடம்பெற்ற கவிராத்திரி நிகழ்விற்காக “மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்” என கொடுக்கப்பட்ட தலைப்பிற்காக எழுதப்பட்ட கவிதை… இக்கவி வரிகள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை 1967 இல் வெளியிட்ட “செய்நம்பு நாச்சியார் மாண்மியம்” எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லா இருக்கு பாஸ்..இவ்வாறு எழுதுவோர் குறைவு இக்காலத்தில்

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.

Rathnavel Natarajan சொன்னது…

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

alex paranthaman சொன்னது…

நன்றி சிவா.... நன்றி ரத்னவேல் ஐயா

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

குழந்தைகளால் குடும்பம் சீராக வேண்டும் என்ற நல்ல கருத்துள்ள அழகான கவிதை!