மன்னார் அமுதன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னார் அமுதன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், மார்ச் 11, 2013
இராத்தங்காத ஓர் இரவு
லேபிள்கள்:
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வியாழன், பிப்ரவரி 28, 2013
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்
ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு
ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்
விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்
ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை
ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன
பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு
இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
--மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வெள்ளி, பிப்ரவரி 22, 2013
பேயோன்
தலைவலியோடு எழும்போதே
பேயைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தான்
கண்கள் சிவத்தும்
நரம்புகள் புடைத்தும்
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்
பேயடித்ததால்
வீங்கிக் கிடக்கிறது
சோற்றுப் பானையும்
மனைவியின் முகமும்
ஆறொன்று
ஓடி மறைந்த வடுவாய்
காய்ந்திருந்தது
பேய் கழித்த சிறுநீர்
வெட்டியெடுத்த மண்போட்டு
மறைக்கப்பட்டிருந்தது
அதன் வாந்தி
வந்ததற்கான
எல்லா அடையாளங்களையும்
விட்டே சென்றிருந்தது பேய்
அலங்கார அறையொன்றில்
பேயைக் காட்டுவதாய்
அழைத்தான்
அங்கு பேயுடைத்த
கண்ணாடிச் சில்லுகளில்
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது
எனது முகம்
-- மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
செவ்வாய், ஜனவரி 22, 2013
தேவதைகளின் தனிமை
நீயென்னைத்
தனித்திருந்த
நாட்கள் நான்கும்
நரகங்களாகிப் போயின
பார்க்கும் பொம்மைகளில்
கூட நிழலாடியது
உன் முகம்
அதிகாலை அணைப்பும்
முத்தமும் சிணுங்கலும்
எதுவுமற்று விடிந்திருந்தது
வாழ்க்கை
உன்னை வந்தடைந்த
ஐந்தாம் நாள் காலையில்
ஊர்க்குருவிகளோடும்
ஓட்டுப்பல்லிகளோடும்
தோட்டத்துப் பூக்களோடும்
பேசிக்கொண்டிருந்தாய்
மனிதர்கள் அற்ற
தனிமைப் பெருவெளியில்
நீ
மகிழ்ச்சியோடு
மட்டுமேயிருந்தாய்
கண்டவுடன்
பொம்மைகளைப் புறமொதுக்கி
கட்டிக்கொண்டாய்
அக்கணத்தில்
அர்த்தப்படுத்தியிருந்தாய்
என்
வாழ்க்கையையும்
தனிமையையும்
லேபிள்கள்:
கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
திங்கள், ஜனவரி 21, 2013
யுத்தசாட்சி - 1
மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம்சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்
யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே
எப்படியிருக்கிறாயென
எவரும் கேட்பதில்லை
எத்தனை முறையென்றே
கேட்கிறார்கள்
உடல் கிழிந்து
உயிர் கருகிய நாட்கள்
எத்தனை என்று
தெரியவில்லை
முள்முடிகள் குத்தியதில்
முட்டிக்கால் தாண்டியும்
ஓடிக்கிடக்கிறது இரத்தம்
எத்தனை பேரென்று
எண்ணவில்லை
காடையர்கள்
பகிர்ந்துண்ட
கடைசி அப்பத்தைப் போல்
நானும் சிதறிக்கிடக்கிறேன்
எத்தனை முறையென்றும்
நினைவிலில்லை
கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி
காத்திருப்போரிடம் கேட்கிறேன்
“உணவுப் பொதிகளை
வைத்திருப்போரே
உங்களில் பாக்கியவான்கள்.
அவர்களுக்கு
நான் சித்தமாயிருக்கிறேன்”
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
செவ்வாய், டிசம்பர் 04, 2012
சோல்ஜர் @ சொறிநாய்
சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு
காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்
அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்
வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்
சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்
காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்
லேபிள்கள்:
கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
திங்கள், நவம்பர் 26, 2012
முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”
முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”
-- மன்னார் அமுதன்
தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார். சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.
-- மன்னார் அமுதன்
தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார். சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.
நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. பொருளாதாரத் தேடலில் குடும்ப உறவுகளையே தொலைத்து நிற்கும் தோழர்களுக்கு மத்தியில் உற்ற துணைக்கு முன்னுரிமை அளித்து காதல் கவிதைகளை வார்த்துள்ளார் கவிஞர். பெரும்பாலான எழுத்தாளர்கள் முதலில் எழுதத் தொடங்குவது கவிதையைத் தான்... காதலைத் தான்... காலம் போற்றும் காதலைக் கருவாய்க் கொண்டு “அழகிய இராட்சசி” எனும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.
ஒருவரின் மீது வைத்திருக்கும் காதலை எழுத்தின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ கூறிவிட வேண்டும். இதயங்களுக்கிடையே பகிரப்படாத எத்தனையோ காதல்கள் இன்றும் ஏக்கப் பெருமூச்சுகளோடே சுற்றித் திரிகின்றன. பகிரப்படாத அன்பு பெறுமதியற்றதாகி விடுகின்றது. ஒருவரை எவ்வளவு நேசிக்கின்றோம் என்பதை அடிக்கடி செயல்களின் மூலம் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு உணர்த்தப் பிரயத்தனப்படும், ஒரு பகிரப்பட்ட ஒரு காதலின் தொகுப்பாகவே கவிஞர் சுரேஷ்குமாரின் அழகிய இராட்சசியை நான் பார்க்கிறேன்.
மிக எளிய நடையில், அனைவருக்கும் விளங்கும் வகையில் ““சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்ற பாரதியின் வாக்கிக்கேற்ப கவிதைகளைப் படைத்துள்ளார் சுரேஷ்குமார்.
“கவிதை என்பது உணர்ச்சியின் உதிரப் பெருக்கு. தன்னுள் பெருக்கெடுத்த உணர்வுகளைத், தான் நன்றாக அனுபவித்து, அதனை உட்கொண்டு பிரசவிப்பவன் தான் கவிஞன். கவிதை என்பதுஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்பளிப்புகள்” என்பான் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த். சுரேஷ்குமாரின் உள்ளத்து உணர்வுகள் கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. யதார்த்தமான உவமைகளைக் கையாண்டு கவிதைகளுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். நான் ரசித்த அவருடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
“அரிசி மண்ணெண்ணெய்
வாங்க வரிசையில்
முண்டியடிக்கும் ஜனங்களைப் போலவே
முண்டியடித்து நிற்கின்றன
என் கனவுகள்”
‘கண்ணாடியைப் பார்த்து
உன்னழகை சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னைப் பார்த்து
தங்களின் அழகை
சரிசெய்து கொள்கின்றனர்”
அழகு என்பது எங்கு உள்ளது என்பது இன்றுவரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என்பதை நாம் அறிந்திருந்தாலும், மற்றொருவர் பார்த்து தம்மைத் திருத்திக் கொள்ளும் வகையில்
‘என் கன்னக்குழிகளில்
ஊற்றி வைத்திருக்கின்றேன்
நீ கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை”
தேநீர் அருந்திய
கோப்பையை எறிந்துவிடாதே
இதழ்கள் பட்ட
கோப்பையின்
ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம் காதல்
காதலில் வென்றவர்கள் சாதனை படைக்கிறார்கள். காதலில் தோற்றவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள் என்பார்கள். காதல் எவரையும் வீழ விடுவதில்லை. பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயத்தில் அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை நினைவு படுத்துவதற்காக வெளியிடப்படும் இந்நூலோடு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு இன்னும் பல நூல்களைப் படைத்து கவியுலகில் அழியாத சுவடுகளை கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார் பதிக்க வேண்டுமெனெ மனமாற வாழ்த்துகின்றேன்.
#அழகிய ராட்சசி கவிதை நூலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து
லேபிள்கள்:
கட்டுரைகள்,
நூலறிமுகம்,
நூலாய்வு,
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
புதன், நவம்பர் 07, 2012
மூத்த மகன்
நான்
யாராய் இருந்திருப்பேன்
அக்காவின் உலகில்
பொட்டிட்டும் பூவைத்தும்
அழகு பார்த்தவள்
தெருச்சண்டைகளில்
எனக்காய் வாதிட்டவள்
பாவாடை மடிப்புகளில்
எனைப் பாதுகாத்து
அப்பாவின் பிரம்படிகளை
அவளே வாங்கியவள்
பந்திகளில் முந்தி
எனக்காய்
பலகாரம் சேமித்தவள்
கட்டிக் கொள்பவனை
எனக்கும் பிடிக்கவேண்டுமென
மீசை வைக்கச் சொன்னவள்
அவள் உலகில்
யார் யாராகவோ
நான்
யாருடைய உலகிலும்
தம்பியாக முடியாமல்
மூத்த மகன்
-- மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வியாழன், ஜனவரி 12, 2012
அன்றும் இன்றும் என்றும் - பொங்கல் (சிறப்புக் கவியரங்கக் கவிதை)
வசந்தம் தொலைக்காட்சியில் 2012-01-15 ஆம் திகதி ஒளிபரப்பப்பட உள்ள பொங்கல் சிறப்புக் கவியரங்கம் - கவிபாடுவோர் தமிழ்மணி அகளங்கன்(தலைமை), வதிரி சி.ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, மன்னார் அமுதன்
---
கண்ணிரண்டும் காதிரண்டும் கொண்டவ னாயல்லாமல்
பண்ணிரண்டு படைக்கும் ஆற்றலோடு எனைவகுத்த
கண்ணாலோ காதாலோ கண்டறியா கர்த்தாவே
என்நாவில் வந்தமர் வாய்.
ஆன்ற பெருங்கவிஞர் அகளங்கன் தலைமையிலே
தோன்ற நான்செய்த பெரியதவம் யாதறியேன்
கூனோடும் குறையோடும் பிறக்குமென் கவிதையிலே
குறைகண்டால் பொறுத்தருள்வீர்
அன்று:
மண்ணிலே கருவாகி
மண்ணிலே உருவாகி
மண்ணிலே மாண்டவன் தான் உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்
வெள்ளாமை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி
பொன்னென்ற ஒரு வார்த்தை
பொன்னைக் குறித்திடலாம்
மண்ணென்ற ஒரு வார்த்தை
மண்ணைக் குறிப்பதில்லை
தோழர்களே
மண்ணென்ற ஒரு வார்த்தை
மண்ணைக் குறிப்பதில்லை
அது நம் முன்னோரின் மானம்
மானம் காப்பதற்காய்
மறவர்கள் ஏரெடுத்து
வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெலாம் ஏருழுத்தி
ஒற்றை விதை விதைத்து
ஒரு கோடி நெல் அறுத்து
பத்துக் கரும்பெடுத்துப் பாகாக்கி
பசுவின் பாலூற்றி
ஆலாக்கு நெய்யூற்றி
ஆக்குவோம் பொங்கல்
பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்
பொங்குமே தைப்பொங்கல்
புலருமே தைத்திங்கள்
தமிழர் பட்ட துன்பமெல்லாம் மங்கட்டும்
தரணியிலே இன்ப வெள்ளம் பொங்கட்டும்
இன்று:
பொங்குக பொங்கலென்று
புலவர்கள் பாடிவிட்டால்
பொங்கிடுமோ...
நான் பொங்கலைத் தான் பாடுகின்றேன்
பொங்குக பொங்கெலென்று
புலவர்கள் பாடிவிட்டால்
பொங்கிடுமோ...
தமிழர் குடி பெற்ற துன்பம்
மங்கிடுமோ
தரணியிலே இன்ப வெள்ளம்
தங்கிடுமோ
தரம் பிரித்து
விதை விதைக்க காணியுமில்லை
தரிசு நிலம்
கிழித்து உழ ஏருமேயில்லை
உருப் படியாய்
ஊரில் ஒரு காளையுமில்லை
உலைக்குப் போட
உலக்கில் சிறு நெல்லுமேயில்லை
வீட்டிற்கு ஒருவர்
விரைந்தோடிப் போய் நாட்டைக்
காக்கத் தேவையுமில்லை
நல்லதுதான் தோழர்களே
நாடென்றும் நிலமென்றும்
நமக்கெதற்கு
ஏதோ ஒரு மூலையிலே
ஒடுங்கிக் கிடந்துவிட்டு
பசித்தால் பாண் தின்னும்
பரம்பரை நாம்
தீதோ நன்றோ
ஏதும் அறியாமல்
ஏதோ ஒரு நாட்டில் உழுகின்றோம்
மண்ணும் நமதல்ல
மாடும் நமதல்ல -விளையும்
பொன்னும் நமதல்ல
பொருளும் நமதல்ல... உழுகின்றோம்
ஓயாமல் உழைத்துவிட்டு
சாய மடியின்றி
எங்கோ ஒரு மூலையிலே
சாகின்றோம்
நாமில்லா நாடா - தனியாக
நாடென்றும் நிலமென்றும்
நமக்கெதற்குத் தோழர்களே
என்றும்:
நமக்கெதுவும் வேண்டாம் தான்
நம் குடிக்கும் வேண்டாமா
என்றும் ஏர் பூட்டியுழ
சாதி சனம் கூடியழ
நமக்கெதுவும் வேண்டாம் தான்
நம் குடிக்கும் வேண்டாமா
மண்ணிலே கருவாகி
மண்ணிலே உருவாகி
மண்ணையே ஆண்டவனே உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்
விளைநிலங்கள் செழிக்காது
சூரியன் இன்றி
உழைத்துக் களைத்து உழவனுக்கு
சொல்லுவோம் நன்றி
நன்றி சொல்ல நாமும் இன்று
பொங்க வேண்டுமே
நாளை ஒரு நாள் மலரும்
பொங்க வேண்டுமே
பொங்கட்டும் இன்பம்
பொங்கலைப் போலினிமேல்
மங்கட்டும் நாம் பட்ட துன்பமெலாம்
தங்கட்டும் இன்பம் தரணியெல்லாம்
===================
லேபிள்கள்:
கவியரங்கம்,
பொங்கல்,
மன்னார் அமுதன் கவிதைகள்,
வசந்தம் தொலைக்காட்சி
வெள்ளி, டிசம்பர் 09, 2011
புறக்கணிப்பு
என்னைப் புறக்கணித்துச் சென்றவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவர்களை வாழ்க்கை புறக்கணித்திருக்கிறது.-- மன்னார் அமுதன்
======================================================
இருண்டே
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை
வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத்
தலைமுட்டும் வீடென்றும்
எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்
நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை
எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்தினாய்
புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்
======================================================
இருண்டே
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை
வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத்
தலைமுட்டும் வீடென்றும்
எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்
நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை
எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்தினாய்
புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்,
mannar amuthan
திங்கள், ஜூலை 18, 2011
அந்த ஒருவன்...
உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்
எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்
இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்
பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்
ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு
எப்படி ஏற்றுக் கொள்ள...
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்
.
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
திங்கள், ஜூலை 04, 2011
பருவமெய்திய பின்
The greatest thing a father can do to his children, is to love their mother.
- Anjaneth Garcia Untalan
பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்
வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா
மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..
முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு
துக்கம் தாளாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா
இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை
லேபிள்கள்:
அப்பா,
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
புதன், ஜூன் 01, 2011
மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்
கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே
நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து
சென்றேன் அந்தச்
செம்மொழி அருகில்
வந்தனம் என்றேன்
வாய்மொழி இல்லை
கண்டும் காணாமல்
நிற்காமல் செல்லுமிவள்
நிலவின் மகளோ
நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்
தீண்டாமல் செல்கிறாளே
நீரின் உறவோ
தொடர்ந்தேன் பின்னால்
தொழுதேன் கண்ணால்
அமர்ந்தேன் அந்த
அமிர்தம் அருகில்
**
தாயின் கையைத்
தட்டி எழுந்தவள்
தாமரைப் பூக்களாய்
வெட்டி மலர்ந்தாள்
“போதும் போதும்”
போகலாம் என்ற
அன்னையை முறைத்து
அருகினில் வந்தாள்
போறோம் நாங்க
நீங்களும் போங்க
இதழ்கள் பிரித்து
இருவரி உதிர்த்து
அரிவரிச் சிறுமியாய்
மறைந்தவள் போனாள்
***
சிந்தையை விட்டுச்
சிதற மறுக்கும்
மங்கையைக் கண்டு
மாதங்கள் இரண்டு
மறுபடி அவளைக்
காணும் நாள் வரை
மனதினை வதைக்கும்
கனவுகள் திரண்டு
***
தேய்பிறையோ,
வளர்பிறையோ
தெரியாத நிலவு அவள்
அடைமழையோ
இடி புயலோ
அறியாத அல்லி அவள்
***
புன்னகையின் தேவதையாய்
பூமியிலே பிறந்தவளே
என்னபிழை நான் செய்தேன்
ஏனென்னை வெறுக்கின்றாய்
காணாமல் நானிருந்தால்
கணமொன்றில் இறந்திடுவேன்
நோய்கொண்டு போகுமுன்னே
நானுன்னைக் காண வேண்டும்
***
என்
பாசமுள்ள பூமகளே
வாசலிலே கண்டவுடன்
வாங்கப்பா என்காமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்டு
அம்மா அம்மாவென
அரற்றி அழுதவளே
அச்சம் வேண்டாம்
பிச்சைக்காரனோ
பிள்ளை பிடிப்பவனோ
அச்சம் அறியாத – இளம்
ஆண்மகனோ நானில்லை
அப்பா…
நானுன் அப்பா
சீதனச் சீரழிவால்
சிதறிய நம் குடும்பம்
சீதேவி உன்னாலே
சீராக வரம் வேண்டும்
வாசலிலே கண்டவுடன்
வாங்க என்று சொல்லாமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்ட
என்
செல்ல மகளே -உன்னைச்
சீராட்ட வரம் வேண்டும்
================
கவிதையின் ஒலிப்பதிவு: இங்கே
==================
குறிப்பு:
மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதல் லெப்பை அவர்களை நினைவுறுத்தும் முகமாக சக்தி பண்பலையில் இடம்பெற்ற கவிராத்திரி நிகழ்விற்காக “மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்” என கொடுக்கப்பட்ட தலைப்பிற்காக எழுதப்பட்ட கவிதை… இக்கவி வரிகள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை 1967 இல் வெளியிட்ட “செய்நம்பு நாச்சியார் மாண்மியம்” எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
செவ்வாய், மே 31, 2011
நேயம்
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
திங்கள், மே 30, 2011
பிச்சை
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



