நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, டிசம்பர் 09, 2011

புறக்கணிப்பு

என்னைப் புறக்கணித்துச் சென்றவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவர்களை வாழ்க்கை புறக்கணித்திருக்கிறது.-- மன்னார் அமுதன்

======================================================

     

இருண்டே 
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை 


வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத் 
தலைமுட்டும் வீடென்றும்


எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்


நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை


எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்தினாய்


புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்

வியாழன், டிசம்பர் 08, 2011

மொழி பெயர்க்கப்பட்ட கவிதைகள் - கே.எஸ்.சிவகுமாரன்


இலக்கியத் திறனாய்வாளர் திரு.கே.எஸ்.சிவகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்ட எனது கவிதைகள் “TAMIL POEMS IN TRANSLATION" எனும் தலைப்பில் இன்றைய ( 07-12-2011) DAILY NEWS - ARTSCOPE PAGE NO 18 இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நன்றிகள்: இலக்கியத் திறனாய்வாளர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் & Daily News



உருப்பெருக்கி வாசிக்க: https://picasaweb.google.com/100358110146471442229/NeBCJG#5683598920089858466


திங்கள், டிசம்பர் 05, 2011

மணியக்கா


சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்
          -- நா.காமராசன் -கறுப்பு மலர்கள்


மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி... கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்.... இதயம் உருக்குதடி....என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பது போல் இன்று இந்த ஊர் மக்களின் ரெக்கார்ட் டான்ஸ் மேடையில் ஆடுகிறாள்.

மணியக்கா முறையாகப் பயின்ற நடனமங்கையாய் இருப்பாள் என யாருமே அறிந்திருக்கவில்லை. ஊரே வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தது. விமலனும் கண்வெட்டாமல் மணியக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். வானிலிருந்து விழுந்து தெறிக்கும் ஆலங்கட்டிகளைப் போல வண்ண ஒளிகள் மணியக்காவின் மீது விழுந்து உருண்டு ஓடியது.

அவள் இடுப்பின் நெளிவும், மேல் துணியின் விலகலும் விமலனுக்குள் ஹார்மோனைத் தூண்டியது. குடித்திருந்த சாராயம் மணியக்கா சொன்ன அண்ணாச்சியின் சேட்டைகளை நினைத்து நினைத்து அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டம் முடியட்டும் என்று விமலன் பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தான்.
-----------------------

மணியக்காவை முதன்முதலில் பார்த்த போது விமலனுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோளில் ஒரு கை விழுந்து நெல்லூருக்கு எம்புட்டு தூரம் என்ற போது விமலன் திடுக்கிட்டுட்டான். பக்கத்தில் வாய் நிறைய வெற்றிலையும், நெற்றியில் பெரிய பொட்டும், பாவாடைக்குப் பதில் வேட்டியும், இரண்டு நாள் மீசை தாடியும் பின்னப்பட்ட தலைமுடியுமாக ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாள்.  ஒன்னுக்கொன்னு முரணா இருந்தாலும் கண்ணுல ஒளியும், முகத்துல ஒரு தேஜசும் இல்லாம இல்ல. நாலாவது இறக்கம் என்று விட்டேத்தியாய் சொல்லிவிட்டு திரும்பி மறுபக்கம் இருந்தவனிடம் வாடகைக்கு வீடு புடிக்க முடியுமா என்றாள். எண்ணங்களுக்குள் மூழ்கிக் கிடந்த விமலனுக்கு அவள் குரல் குளிக்கப் போகும் பௌபு செட்டுக் கிணத்துக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.

விமலனுடைய உடலுக்குள் திடீரென ஏற்படும் மாற்றங்களுக்கும், மனதில் தோன்றும் விசித்திர எண்ணங்களுக்கும் உருவம் கொடுத்தது போல் இருந்தாள் அவள்.நானும் ஒரு நாள் இப்படித் தான் போய்விடுவேனோ என்ற எண்ணம் மேலோங்க உடல் சிலிர்த்தது. ஆம்பளையாடா நீ, நெளியாம நேரா நில்லுடா, ஒழுங்கா நட, நகத்தைக் கடிக்காத, நிலத்துல கோலம் போட்ட கட்ட விரலை உடைச்சுடுவேன், விமலா வாடா குளிக்கப் போலாம், அங்கல்லாம் கையை வைக்காதீங்க மாமா என்ற வார்த்தைக் கோர்வைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் விமலனின் காதுக்குள் விழுந்து மனதை நிறைத்துக் கொண்டிருந்தது.ஆம்பளைனா கோவப் படனும்டா, எல்லாத்துக்கும் அழுதுகிட்டு மூக்க வடிச்சிகிட்டா வந்து நிக்கிறதுனு அம்மா சொன்னது நினைவுக்கு வர, உனக்கெல்லாம் வீடு புடிச்சுக் குடுக்கிறது தான் எனக்கு வேலையான்னு நெஞ்சை நிமிர்த்திய போது பேருந்தில் இருந்தவர்கள் விமலனை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஊருக்கு புதுசு அதான் கேட்டேன் முடியலன்னா விட்டுரு என்று பலகீனமாய் முனங்கிவிட்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஆட்காட்டிவிரலால் வழித்து, கட்டை விரலோடு சேர்த்து நளினமாய் சுண்டினாள்.

ஒரு துளி விமலனில் தெறிக்க தலையை உலுப்பித் திரும்பிப் பார்த்தான். அவள் அவனையே பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பேரு  என்றான். சுப்பிரமணி, மணியக்கானு கூப்பிடுவாக என்றாள்.

--------------

வேப்பங்குளத்துள ஒரு பெரிய வீடு வந்திருக்கு.கான்ராக்ட் எடுத்தாச்சு, வேலையாள் மட்டும் தான் பாக்கி. விமலா நீயும் வாறியா என்று பெயிண்டர் அண்ணாச்சி கேக்கும் போதே விமலன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தயாராகினான். முன்னாடி போயிட்டிரு விமலா. மாரியம்மன் கோயில் முக்குல நில்லு. இன்னும் ரெண்டாள பாத்து கூட்டியாந்திடுறன்னு போன அண்ணாச்சி அரை மணிநேரம் கழித்து மணியக்காவையும், சேகரையும் கூட்டிக் கொண்டு வந்துட்டிருந்தார்.

சைக்கிள் பாரில் ஒரு காலைப் போட்டுக் கொண்டு ஒரு காலால் ஊன்றி நின்று வேப்பமரத்தில் ஓடிக்கொண்டிருந்த அணில்களைப் பார்த்துக் கொண்டிருந்த விமலனுக்கு மணியக்காவைப் பார்த்ததும் கால்கள் வலுவிழந்து நிலத்தில் சரிவது போல இருந்தது. என்ன விமலா நாறின மீன நாயி பாக்காப்ல பாக்க... அதுவும் உன்னப்போல ரெண்டுங்கெட்டான் தான் என்ற அண்ணாச்சியின் தொனியில் நக்கல் தூக்கலாக இருந்தது.

முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரை அடக்கியபடி நா.. ஒன்னும் அப்டி இல்ல அண்ணாச்சி. சும்மா வாய்க்கு வந்தத பேசி ஆளுக முன்னாடி அவமானப் படுத்தாதிக என்று மட்டுமே விமலனால் சொல்ல முடிந்தது. அண்ணாச்சி விமலனைப் பற்றிச் சொன்ன தகவல் மணியக்காவிற்கு புதிதாக இருந்தது. ரொம்பத் தான் அலுத்துக்குறடே. அண்ணாச்சி இல்லாததையா சொல்லிட்டாக நீ ஆம்பளனா நாலு அடி நெளியாம நடந்து காட்டு என அண்ணாச்சியோடு சேர்ந்து கொண்டான் சேகர்.

அண்ணாச்சி வேலை கொடுக்கிறீக எங்கிறதுக்காக எது வேணும்ணானும் பேசலாம்னு நினைச்சிக்கிடாதிக. இந்த வேலை இல்லன்னா இன்னொரு வேலை. சின்னப் பயல அழ வைச்சிப் பாக்காதீக என்று மணியக்கா சொல்ல விமலனுக்கு மணியக்காவின் மீது முதல் முறையாக மரியாதை வந்தது.

உனக்கென்ன மணி. வாயிருக்கு .. பிழச்சுக்குவ. நம்மால அப்டியெல்லாம் முடியாது. பெயிண்ட் அடிச்சா தான் சோறு. பேசிகிட்டே நிக்காம நீயும் விமலனுமா அந்த கதைவுகளையும் சுவரையும் சாண்ட் பேப்பர் போட்டு தேச்சிருங்க. சேகரு சுண்ணாம்பை வடிச்சு நீலத்தைக் கலந்து ஒரு கோட்டிங் அடிச்சிட்டிருடேன்னு சொல்லிட்டே அண்ணாச்சி சைக்கிள எடுத்துட்டு கிளம்பிட்டாரு. அண்ணாச்சி திரும்ப வரும் போது மப்புல தான் வருவார்னும் விமலனுக்குத் தெரியும்.

அண்ணாச்சியோடு வெள்ளையடிக்க வருவது அவனுக்கு இது முதல் முறையில்ல. அண்ணாச்சிக்கு ஆள் கிடைக்கலன்னா விமலனையும் சேத்துக்குவார். விமலனுக்கு முக்காச் சம்பளம் குடுத்தாப் போதும். மேலதிகமா வேணும்னு கேட்கக் தெரியாதவன்.மேற்பார்வைக்கு ஆளில்லைனாலும் குடுத்த வேலையை செய்வான். இப்புடி எத்தன பேரு சம்பளத்த புடிச்சுகிட்டு குடுத்தாலும் புள்ளபேறுக்கு போயிருக்கிற அண்ணாச்சி பொண்டாட்டிக்கு பத்தவே பத்தாது.அவ வயிரும் வத்தவே வத்தாது.

ஆளில்லாத வீட்டில் ஆளுக்கொரு மூலையில் நின்று வேலை செய்வது ரெண்டு பேருக்குமே சங்கடமாக இருந்தது. யாரு முதலில் பேசுறதுன்னு யோசித்துக் கொண்டிருக்கும் போதே விமலன் தும்மினான். விமலா மூக்க மறைச்சு துண்ட கட்டிக்கோ. தூசியால்ல இருக்கு என சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் மணியக்கா.

இரண்டாம் நாளிலேயே நீண்ட கால நண்பர்களைப் போல இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டே சைக்கிளில் போகும் போது ”ரெண்டுங் கெட்டான் ரெண்டும் ஒண்ணா போகுது.. இவனுக முகத்துல முழிச்சா உருப்பட்டாப் போல தான் என்று தொப்பையைத் தள்ளிக்கொண்டே போனார் தலையாரி.

தனக்குள் ஏற்படும் எதிரும் புதிருமான எண்ண அலைகளை மணியக்காவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என விமலன் நினைத்தாலும் கூச்சம் தடுத்தது. எப்படியாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக மணியக்கா, நீ நல்லா உயரமா ஆம்பளை மாதிரி தானே இருக்கிற, பிறகெதுக்கு பொம்பிளை மாதிரி நடந்துக்குற என்றான்.

கேட்டுக் கேட்டு புளிச்சுப் போய் எரிச்சல் படுத்துற கேள்வியா இருந்தாலும் அறிஞ்சுக்கனும்னு கேக்கிறவனுக்கு சொல்றது தானே நியாயம்னு மணிக்கு தோணிச்சு. பிறக்கிறப்போவும், வளர்றப்போவும் நானும் உன்ன மாதிரி ஆம்பிளயா தான் இருந்தேன். போக போக மனசோட ஆசை அதிகமாகி மூளையை கட்டிப் போட்டிருச்சு. நானும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு தான் முயற்சி பன்றேன். முடியலயே. மூளை தோத்துருது..ஆசை ஜெயிச்சுருது.

மனுசனோட வேறுவேறான குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக இருக்கும். இதுல 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்படாத மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்தும். கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் சம்பந்தப்பட்டவை. அது எக்ஸ் எக்ஸ் என்று ஆண்களிலும் எக்ஸ் வை என்று பெண்களிலும் இருக்கும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது எக்ஸ் மற்றும் வை ஆகவும், பெண்களில் இரண்டு எக்ஸ்களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் எக்ஸ்சும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து ரெண்டு எக்ஸ் குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் வையும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து எக்ஸ்வை குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். ஒரு எக்ஸ் அல்லது ஒரு வை குரோமோசோம்  அதிகமாகிவிட்டால் அந்தக் குழந்தை என்னைப் போல் பிறந்துவிடுகிறது.ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிஞ்சிரலாம். ஆனா திருநங்கை என்பதை ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடையும் பதிமூனு வயசிக்கு மேல தான் கண்டுபிடிக்கலாம்ன்னு அறிவியல் விளக்கமும் குடுத்தா மணியக்கா. ஆனா அது ஒன்னும் விமலனுக்குப் புரிவதாக இல்லை.மணியக்கா பேசிட்டிருக்கிறப்பவே சாராய நெடியோடு அண்ணாச்சி உள்ளே நுழைந்தார்.

வாங்குற சம்பளத்துக்கு வேலை செஞ்சா தான் உடம்புல ஒட்டும். ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக்கு. பேசிட்டே நின்னு பழகினா உடம்பு தினவெடுத்திரும் விமலா. வேலை செய்ய வளையாது. மணி நீ மேல வா, வேலையிருக்குனு சொல்லிட்டே அண்ணாச்சி மாடிப்படியேறி மேல் அறைக்குள் போனார். பின்னாலயே மணியும் போனா. போன வேகத்துலயே திரும்பின மணி நீ எல்லாம் மனுசனாடா.இப்புடிப் பொழைக்கிறதுக்கு சாகலாம்னு அண்ணாச்சியை வசைபாடிகிட்டே மாடிப்படிகளில் கீழிறங்கினாள்.

பின்னாலேயே ஓடி வந்த வந்த அண்ணாச்சி பாதிப் படிகளிலேயே மணியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆரஞ்சு மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் சிறு குழந்தையைப் போல கெஞ்சினார். புரிஞ்சுக்கோ மணி.. பொண்டாட்டி வேற ஊரில இல்ல. சம்பளத்துல வேணும்னா இருபது ரூபா கூட்டித் தாறேன். மண்ணு தின்னுற உடம்ப மனுசன் தின்னுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு.அப்புடியே காப்பாத்தி வச்சு நீ யாருக்கு குடுக்கப் போறனு சொல்லிட்டே மணியக்காவை மேல் மாடிக்கு இழுத்துட்டுப் போனார்.

இதே போல தான் விமலன் பம்பு செட்டுல குளிச்சுட்டு இருக்கிறப்போ அங்க வந்த தலையாரி கிணத்துக்குள் குதிச்சு குளிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்துல விமலா நீச்சல் தெரியுமாடே உனக்குன்னு கேட்டவரிடம் எட்டிப் பார்த்து இல்லையென்று தலையாட்டினான். நீச்சல் தெரியாதவன்லாம் ஆம்பளையாடா . வா நா நீச்சல் பழக்கி விடுறேன்னு கூப்பிட தண்ணிக்குப் பயந்து படிகளில் இறங்கினான் விமலன்.

பயப்படாதடே இறங்கி வா நா இருக்கன்லே.. முதல்ல தண்ணிப் பயம் போகனும். பயப்படாம குதிச்சிரு.. முங்க விடாம நா தூக்கிடுறன்னு தலையாரி கரிசனையாய் சொல்ல விமலனும் குதித்தான். குதிச்சதும் தண்ணி வாய் மூக்கெல்லாம் போயி நாசியில ஏற மூச்செடுக்க முடியாமல் ஒரு நிமிடத்தில் சாவு இப்புடித் தான் வரும் போல என விமலன் நினைத்துக் கொண்டான். அதற்குள் தலையாரி விமலனின் முடியைப் புடிச்சு இழுத்து கடைசிப் படியில போட்டார். தலையாரி தொப்பையை நீருக்கு மேல் விட்டு ஒரு தவளை தலைகீழாய்க் கிடப்பது போல் மிதப்பதை பார்க்கும் போது விமலனுக்கும் நீச்சலை எப்படியாவது பழகிரனும்னு வைராக்கியம் வந்துருச்சு. மூச்சிரைப்பு அடங்கியதும் படியில புடிச்சுக்கிட்டே காலை மட்டும் அடிக்கத் தொடங்கினான். அதைப் பார்த்து பெரிதாய் சிரித்த தலையாரி தண்ணிக்குள்ள வந்தாத் தானுடா நீச்சல் பழகலாம்.என் கையப் புடிச்சுக்கோன்னு சொல்லி விமலனை நடுக்கிணத்துக்கு கூட்டிட்டு போயி அவன் எதிர்பார்க்காதப்போ இறுக்கி உதட்டோடு உதடு பதித்தார்.

சீய் விடுய்யா மானங்கெட்டவனேன்னு விமலன் உதறித் தள்ளி தண்ணிக்குள் மூழ்கி மூச்சுத் திணறி ஒரு கல்லைப் பிடித்து படியேறும் போது தலையாரி கட்டியிருந்த துண்டு விமலனின் கையில் இருந்தது.தலையாரி எதுவும் நடக்காதது போல் சிரித்துக் கொண்டே போகப் போக பழகிரும் வான்னு சொல்ல அருவருப்பாய் பார்த்த விமலன் துண்டைத் தூக்கி அவன் மேல் எறிந்துவிட்டு படியேறினான்.

படியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க இறங்கி வந்த அண்ணாச்சி நின்னுட்டே கனவு காணுறியோடே, இன்னைக்குள்ள தேய்ப்பு வேலையை முடிச்சுடனுன்னு சொல்லிட்டே போனார்.மணியக்காவுக்கு என்ன ஆயிருக்கும்னு அறிய விமலன் மாடிக்கு ஓடினான். அங்க மணியக்கா குப்புறக் கிடந்தா. விமலனைக் கண்டதும் உடையை ஒதுக்கியபடி எழுந்து கழிப்பறைக்குள் போனாள். உதடு கொஞ்சம் வீங்கியிருந்தது. பிறகு அன்றைய நாள் முழுவதும் ரெண்டு பேருமே பேசிக்கல.

வேலை முடிந்தும் இருவரும் பேசிக் கொள்ளாமலேயே வந்தார்கள்.விமலனின் வீட்டைக் கடக்கும் போது அப்பறங்காட்டி வீட்டுக்கு வா விமலா, ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு மணியக்கா சொல்ல அதைக் கேட்டுக்கொண்டு நின்ற விமலனின் அம்மா சேர்க்கை சரியா இருந்தாத் தானடே நீ சரியா இருப்ப. இப்புடி ரெண்டுங் கெட்டாங் கூட திரியறதுக்கா ஒத்தப் பிள்ளையப் பெத்தன். நீ பசங்க கூட திரியறது தானே. எதுக்கு இது கூடல்லாம் சேருறன்னு கத்தினா.

எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னபடியே விமலனும், எதையுமே கேட்காதது போல மணியக்காவும் ஆளுக்கொரு பக்கமாய் போனார்கள். குளிச்சு, சாப்பிட்டுட்டு கொஞ்சம் இருட்ட ஆரம்பிக்க மணியக்கா வீட்டுக்குப் போனான் விமலன். மணியக்கா நல்லா குடிச்சுட்டு கிறங்கிய கண்களுடன் வீட்டிற்கு வெளியில் இருந்தாள். விமலனைக் கண்டதும் நா குழற எதோ சொல்லிவிட்டு கைகளை ஆட்டி பக்கத்தில் கூப்பிட்டாள். அவனுக்குள் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா. முதலில் வேண்டாம் என மறுத்த விமலன் பிறகு மணந்து பார்த்துவிட்டு வாங்கிக் குடிச்சுட்டு மாங்காய் ஊறுகாயையும் முறுக்கையும் கடித்தான்.

மாடியில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படியாவது அறிய வேண்டும் எனும் துடிப்பில் விமலன் காலையில் விட்ட கதையின் மீதியை மணியக்காவிடம் கேட்டான். மணியக்காவிற்கும் ஏதாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆலய குருக்களா இருந்த அப்பாவுக்கு சேவை செய்ய கோயிலுக்குப் போனது, சங்கீதம், நாட்டியம் படிச்சது, முதல் முறையா சேலையோடு தன்னை பார்த்த தகப்பனார் கோயில் ஆனையின் காலில் கொண்டு போய் கட்டி விட்டது, காப்பாத்துறன் பேர்வழின்னு கூட்டிட்டுப் போய் இரவு முழுக்க தூங்க விடாம இம்சை பண்ணின சின்னக் குருக்கள் என்று எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மணியக்கா சொன்னா.

விமலனும் தன் பங்குக்கு தனக்கு நடந்த சில சம்பவங்களையும் சொல்லி அழுதான். அழாதடா விமலா. எல்லாரும் குரோமோசோம் மாற்றத்தால இப்படி ஆகிறதில்ல.. சில பேர் வளர்ப்புலயும், முறையான பாலியல் கல்வி இல்லாததாலயும் இலகுவாக் கிடைக்கிற கலவி இன்பத்துக் அடிமைப்பட்டும் மனசளவில தன்னை ஒரு பெண்ணா நம்புறதாலயும் இப்படியாயிடுறாங்க. சம்போகிச்சு சுகம் அனுபவிக்கிற வரைக்கும் ஒவ்வொரு ஆம்பளையும் தன்னைத் தானே சந்தேகப்பட்டுக் கொண்டுதான் இருப்பான். ஆம்பளயாவோ பொம்பிளையாவோ பிறந்தா சந்தோசப்படனும்டா விமலா. அத விட்டுட்டு இவனுக நான் தான் பெருசு, நீ தான் பெருசுன்னு சண்டை போட்டுட்டே செத்துப் போயிடறானுக. வாழ்க்கையில நமக்கு ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரியறப்போ தான் அதன் வலியை உணர முடியும்.

எல்லாரையும் போல புருசன் வேணும், புள்ள வேணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இவனுக எல்லாம் சம்போகிக்க மட்டும் தானே வருவானுக. இவனுகளுக்கு அன்புன்னா என்னன்னே தெரிய மாட்டேங்குது. தெரிஞ்சிருந்தாலும் அதை ஏன் என்கிட்ட காட்ட மாட்டேனுறானுக. நல்ல சினேகிதனாக் கூட பழக ஒருத்தனுக்கும் மனசில்லையே விமலா. நீ என் கூட சிநேகிதனா இருப்பியா, என் மேல அன்பா இருக்கியான்னு போதை உச்சத்துக்கு ஏற மணியக்கா விமலனிடம் அலம்பிக் கொண்டே கையை நீட்டி சத்தியம் செய்யச் சொன்னாள். விமலன் சத்தியம் செய்தபடி அவள் கையைப் பிடித்து எழுப்பி வா ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு கூட்டிட்டுப் போனான்.

--

மணியக்கா ஆடிக் களைத்து மேடையில் நிற்கையில் ஒரு இரசிகக் குடிமகன் தள்ளாடிக் கொண்டே மேடையில் ஏறி மணியக்காவின் நெஞ்சுச் சட்டையில் 100 ரூபாயைச் செருவிட்டு விசிலடித்துக் கொண்டே இறங்கினான். அவன் பின்னாலேயே மணியக்காவும் தள்ளாடிக் கொண்ட இறங்க தலையாரியும் அண்ணாச்சியும் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.அண்ணாச்சி தலையாரியிடம் சொல்லியிருப்பான். தலையாரி பல்லைக் காட்டிக் கொண்டே மணி எனக்காக நீ வீட்டுக்கு ஒருக்க வந்து ஆடனும், வெளிநாட்டு சரக்கு  வாங்கி வெச்சிருக்கேன்னு தலையைச் சொறிந்தார்.

அண்ணாச்சியையும் தலையாரியையும் இடித்துக்கொண்டு நடுவில் புகுந்த விமலன் சொருகிய கண்களோடு வா போகலாம் என மணியக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். அந்தப் பிடி அண்ணாச்சி காலையில் பிடித்து இழுத்ததைப் போலவே இருந்தது. கைய விடு விமலா என உதறி முடியாமல் போகவே விமலனின் பின்னால் போனாள் மணியக்கா.

நீ வா, நா சொல்றேன்னு பிடியைத் தளர்த்தாமல் இழுத்துப் போனான் விமலன். மணியக்கா ஆடும் போது வண்ண விளக்குகளில் மின்னித் தெறித்த அங்கங்கள் அவனுக்கு திரும்பத் திரும்ப கண்ணுக்குள் வந்தது. கொஞ்ச தூரம் இழுத்துப்போன விமலன் எதிர்ப்பட்ட மரத்தின் மறைவில் மணியக்காவை தள்ளினான். நடக்கப் போவதை புரிந்து கொண்ட மணியக்கா, விமலா நீ சத்தியம் பண்ணினடா, மறந்துட்டியா, நாம சிநேகிதனுகடாண்ணூ ஏக்கத்தோடு முணங்கிக் கொண்டே விழுந்தாள்.

---*------*------
--ஆக்கம்: மன்னார் அமுதன்---
நன்றி:ஜீவநதி-டிசம்பர்

திங்கள், அக்டோபர் 17, 2011

கே.எஸ். சிவகுமாரன் - பவழவிழா நாயகன்


ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை நூல்களாகவும் தொகுத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல்மிக்க இவர், பத்தி எழுத்து எனும் பதத்திற்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க கே.எஸ்.சிவகுமாரனுக்கு இலக்கிய உலகில் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பது பல இலக்கியவாதிகளின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.

2007 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் சர்வதேச இலக்கியம் தொடர்பான தேசிய கற்கை நெறியொன்றை பகுதி நேரமாகக் கற்றுக் கொண்டிருக்கும் போது தான் கே.எஸ்.சிவகுமாரனுடைய நூல்கள் எனக்குப் பரிட்சயமாயின. கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் பார்வையாளார்கள் பக்கத்தின் முன்னிருக்கையில் கே.எஸ்.சிவகுமாரனைக் கண்ட நாட்களில் அவரோடு பேசும் சந்தர்ப்பம் மிக அரிதாகவே கிடைத்தது. எல்லோராலும் அறியப்பட்ட திறனாய்வாளராக இருந்தாலும் அவரது தன்னடக்கமும், பணிவும், இளைஞர்களோடு உரையாடுவதில் உள்ள ஆர்வமும் நாளடைவில் என்னைப் போன்ற பல இளைஞர்களை அவரை நோக்கி  ஈர்த்தது. இளம் எழுத்தாளர்களை நாங்கள் வளர்த்துவிடுகின்றோம் என்று மேடைக்கு ,மேடை முழங்கிவிட்டு அடுத்தமேடையில் நடு இருக்கையை பிடிக்க ஓடும் தன்னிறைவடையாத இலக்கியவாதிகளுக்கும், கணணி வைத்திருப்பவனெல்லாம் இன்று இலக்கியவாதியாகி விடுகின்றான் என்று மேடைக்கு மேடை வெம்புவோருக்கும் மத்தியில் இளைய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், புதிய சிந்தனைகளையும் வாசிப்பதோடு மட்டுமில்லாமல், தனது ஆக்கபூர்வமான பின்னூட்டம் மூலம் அவர்களை உக்குவித்தும் வருபவர் சிவகுமாரன்.

2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சொன்னாற் போல -01” எனும் நூலில் “மற்றொரு இளைஞர் குழாமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தாம் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து சலிப்படைவது போலத் தெரிகிறது. ஆயினும், சந்தர்ப்பமளிக்கப்படும் போதும் இவர்களின் புதிய சிந்தனைகளை “மரபுவழித் திறனாய்வோர்” அங்கீகரிக்கும் பட்சத்திலும் பொது நீரோடையில் இணைந்து இவர்களும் சங்கமித்து ஆக்கபூர்வமாகச் செயற்படுவர்” (புதிய விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும் - பக்-7) என இளைய தலைமுறையின் மீதான தனது நம்பிக்கையைப் பகர்கின்றார்.

சொன்னாற் போல 1, 2 மற்றும் மூன்று ஆகிய மூன்று நூல்களுமே கலை, இலக்கியம் தொடர்பான ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் பெயர்களும், அவர்கள் வெளியிட்ட நூல்களின் பெயர்களும் மாணவர்களுக்கும், விமர்சகர்களுக்கும் உசாத்துணை நூல்களாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

பவளவிழா நாயகனின் தன்னடக்கத்திற்கு மற்றுமொரு சான்று  “இலக்கிய வகைமை ஒப்பாய்வு” எனும் பத்தி எழுத்தில் காணப்படுகிறது. அதில் “இந்தப் பத்தியில் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் சொல்ல நேர்ந்திருக்கிறது. தன்னடக்க, இன்றிச் சுயபுராணமாய் இது இருக்கின்றது என நம்மில் சிலர் நினைக்கக் கூடும்.. ஆனால், என்ன செய்வது வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்படும் பொழுது, நாமே நமது சுயவிபரத்தைப் பொருத்தமறிந்து சொல்வதில் தப்பில்லை என நினைக்கின்றேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என வாசகர்களிடம் கருத்துக் கேட்கிறார்.

உண்மைதான்... வரலாற்றில் இருட்டடிப்புச் செய்வதில் வல்லவர்கள் சில திறனாய்வாளர்கள்... கட்டுரைகளின் ஆழம் அதிகரிப்பதற்கு அதில் சேகரிக்கப்பட்ட உண்மைத் தகவல்களை (fact) உள்ளீடு செய்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ அல்லது மாவட்டத்திலோ இயங்கி வந்த எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிக்கும்போது அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். ஓரிருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு, (மற்றவர்களின் பெயரை மறந்து விட்டேன்)என அடைப்புக்குள் போடுவதே ஒரு இலக்கிய இருட்டடிப்புத் தான். அவ்வாறு முற்று முழுதான தகவல்கள் கிடைக்காத போது எவருடைய பெயரையும் குறிக்காமல் விடுவது சிறப்பு. இத்தகையவர்களின் இருட்டடிப்புச் செயல்பாடுகள் தான், இலக்கியவாதி தன்னைத் தானே புகழ்ந்து எழுத வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

Critic என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு விமர்சகர், திறனாய்வாளர், நடுநிலையறிஞர்.. என இன்னும் பல தமிழ்ப் பதங்கள் உள்ள போதிலும் தன்னை ஒரு திறனாய்வாளர் என்று கூறி கொள்வதை விரும்பும் சிவகுமாரன், விமர்சகர் எனும் பதத்தை கண்டனக்காரர் என்று கூறுகின்றார். நூலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் எழுதப்படும் விளம்பர மதிப்பீட்டுரைகள் இலக்கியத்தின் நேர்மறையான  பக்கத்தை மட்டும் விபரித்துக் கொண்டு சென்றுவிடும். விமர்சனநோக்கில் எடுத்துரைக்கப்படும் நடுநிலை மதிப்பீடுகளே தீவிர இலக்கியத்தின் தூண்களாக உள்ளன. இலக்கியத்தின் வளர்ச்சியும், இலக்கியவாதியின் வளர்ச்சியும் நடுநிலை மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு திருத்தும் நிலையைச் சார்ந்துள்ளது.

மேலும் இவரது நூலின் மூலம் துணிகர எழுத்தாளர்களான சிவரமணி, செல்வநிதி தியாகராஜா, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் பேராசிரியை ரஜினி திரணகம போன்றவர்களின் தகவல்களையும், ஈழத்தின் முன்னோடி நாவலாசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவருமான பிரான்ஸ் கிங்பெரி அடிகளாரைப் பற்றிய தகவல்களையும் அறியக்கூடியதாக உள்ளது. ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள் - திறனாய்வு, திறனாய்வு - அண்மைக்கால ஈழத்து சிறுகதைகள் ஆகிய நூல்கள் சிறந்த சிறுகதைகளைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கும், வளர்ந்து வரும் திறனாய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூலாக அமையும்.

மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். திறனாய்வு எனும் பெயரில் நூலின் அணிந்துரையை மீண்டும் எழுதாமல் படைப்புகளின் உட்கருத்துக்களை விவாதிக்கும் மகத்தான மனிதரான பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவாகுமாரன் அவர்கள் இன்னும் பல நூல்களை வரலாற்றில் பதிக்க வேண்டும்.

புதன், செப்டம்பர் 28, 2011

நெஞ்சிற்கு நீதி



கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக் காலம் வெல்லும்

கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான மனிதர்தம் பாதம் தொட்டு - நல்ல
மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்

பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில் ஒருபுறம் நீதி தவழும்

# கொழும்பு சட்ட மாணவர் தமிழ் மன்றம் -2011 வெளியிட்ட நீதிமுரசிற்காக எழுதிய கவிதை

திங்கள், ஜூலை 18, 2011

அந்த ஒருவன்...


உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்

இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்

பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்

ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு

எப்படி ஏற்றுக் கொள்ள...
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்

.

செவ்வாய், ஜூலை 12, 2011

அருள் மா - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே

ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து
குற்றம் பரப்புதல் சிலரது மடமை

அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்
ஆதரவாகத் தொட்டது உண்மை

வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்
இனிதிலு மினிது இயம்பிய தென்பார்

அருளின் கதைகள் எல்லாம் விதைகள்
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்

வற்றிய கிணற்றில் தவளைகள் போலே
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்
பற்றிய பிடியைத் தளர விடாதே
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்

தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்
கருதியே அருள்மா கதைத்தது அருமை

பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே

*இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரனின் மறைவையொட்டிய கவிதை
*எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரன் பற்றிய மேலதிக தகவல்கள்: இங்கே

கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை நடாத்தும்
எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரன் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம்


மாதந்தோறும் நடைபெறும் கொழும்பு திருமறைக்கலாமன்றத்தின் முழுமதி தின இலக்கியப் பாசறை நிகழ்வில் இம்முறை எழுத்தாளர் அருள் மா.இராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை நினைவு கூறுமுகமாக எதிர்வரும் 14.07.2011 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இல.57, 5ஆவது வீதி, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு - 13 இல் உள்ள கலாசுரபி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. 


டிலாசால் அருட்சகோதரர் பொனவெஞ்சர் தலைமையில் நடைபெறவுள்ள  இந்நிகழ்வில் எழுத்தாளர் அருள்மா இராஜேந்திரன் ஆற்றிய இலக்கிய சேவைகள் மற்றும் மனிதாபிமானப் பணிகள் பற்றிய உரையை ஆசிரியர் தாசியிசஸ் அவர்களும், மன்னார் அமுதனும் ஆற்றவுள்ளனர். 


இலக்கிய ஆர்வலர்களையும், சக படைப்பாளிகளையும் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


திங்கள், ஜூலை 04, 2011

பருவமெய்திய பின்


The greatest thing a father can do to his children, is to love their mother. 
                                                  - Anjaneth Garcia Untalan


பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்

வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா

மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..

முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு

துக்கம் தாளாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா

யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா

இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை

புதன், ஜூன் 29, 2011

வா மணப்போம் விதவை


வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்

ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக்கியெம்
பூவையும் பொட்டையும்
இழந்தோம் - நம்வீட்டு
பூவைக்கு பூவைப்பார் யார்

புண்ணதுவே புண்ணாக
இருக்கட்டும் நெஞ்சத்தில்
மண்ணுக்காய் இல்லாமல்
மாண்டவென் தோழர்க்காய்
வென்றே தரவேண்டும்
விரைவாக சந்ததியை
வா மணப்போம் விதவை

இறுதித் தருவாயில்
உயிர்நீத்த உடற்கெல்லாம்
சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க்
கிடந்த உடலேறிச்
சுகம்கண்ட காடையரின்
பண்பாட்டைப் பார்த்தே பழகு

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட பூமியினை
பூண்டோடு அழித்துப்
புன்னகையைச் சீரழித்தீர்
மாண்டோ போனோம்
மறவர்நாம் - வடலிகள்
மீண்டும் வானுயரும்

நன்றி:
# பொங்குதமிழ்

வெள்ளி, ஜூன் 24, 2011

சாய்ந்தமருதில் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வுகள்


சாய்ந்தமருது “லக்ஸ்டோ” அமையமும், “தடாகம்” கலை இலக்கிய வட்டமும் இணைந்து மாபெரும் ஒருநாள் கலை இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை5.00 மணி வரை கமு/அல் ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் மருதூர் அன்சாரின் தொகுப்பில் 26 கவிஞர்கள் இணைந்து வெளியிடும் “உன்னை நினைப்பதற்கு” எனும் கவிதை நூலும் சப்னா அமீனின் “நிலாச்சோறு” எனும் கவிதை நூலும் வெளியிடப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறப்புக் கவியரங்கமும் இடம்பெற உள்ளன.தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெற உள்ள இக்கவியரங்கில் வெவ்வேறு கவியடிகளில் கவிமணி என்.நஜ்முல் ஹுசைன், கிண்ணியா அமீர் அலி, யாழ் அஸீம், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, கவிஞர் அஸ்மின், எஸ்.ஜனூஸ், மன்னார் அமுதன், ஏ.சி.ராஹில், சுகைதா ஏ.ஹரீம், தர்பா பானு ஆகிய கவிஞர்கள் கலந்து சிற்ப்பிக்க உள்ளனர்.

மேலும் கலை, இலக்கிய ,சமூக, ஊடகத் துறையில் சாதித்தவர்களுக்கான லக்ஸ்டோவின் கெளரவிப்பும்,தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "அகஸ்தியர் விருது" வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளன."வானொலிக் குயில் " ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவுள்ளார்.


கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்:
நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு:-
ஏ.எல்.அன்ஸார்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
எஸ்.ஜனூஸ்
பி.எம்.ரியாத்

வெள்ளி, ஜூன் 03, 2011

“மனிதாபிமானிகள் ” – சிறுகதை


“மியாவ்…”, “மியாவ்…” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங்கள் மனிதாபிமானம் தொடர்பான உரையாடலை இடைநிறுத்த மரக்கதிரையிலிருந்து எழும்பி வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன்.

தன் அம்மாவை எங்கேயோ தொலைத்துவிட்ட, அழகான வௌ;ளைநிறப் பூனைக்குட்டியொன்று எங்கள் வீட்டின் கீழுள்ள சீனாக் கிழவியின் வீட்டிற்கு முன் நின்று கத்திக்கொண்டிருந்தது. அன்று முழுமதி தினம். ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் எங்கிறதால ரோட்டுல பெருசா சனம் இல்ல. எங்கள் குடியிருப்பு புறாக்கூடு மாதிரி. சதுரம், சதுரமா கட்டப்பட்ட அடுக்கு மாடிமனை. எங்கட முதலாவது மாடி எங்கிறதால ஏறி இறங்க லேசு. பக்கத்துல, மேல, கீழ எண்டு நிறைய வீடுகள் இருந்தாலும் இரத்தம் மலிஞ்ச பூமி என்கிறதால யாரும், யாரோடும் பெருசா புழங்கிறது இல்ல. மனசுல ஓர் அழுத்தத்தோட வாழுற மக்கள், படியில பார்த்தா மட்டும் சிரிச்சுக்குவாங்க. எங்கட பக்கத்து வீட்டில ஒரு அம்மம்மாவும், அவட அம்பது வயசு மகளும் இருக்குறாங்க. கீழ்வீட்டில சீனாக்கிழவி தன் மகள், பேரப்பிள்ளைகளோட வாழுறா. அவ சின்னப்பிள்ளையா இருந்தப்ப சீனாவுல இருந்தாவாம், அதனால எல்லாரும் அவவ சீனாக்கிழவி எண்டு சொல்லுவாங்க.

“ஐயோ பாவம், அழகான வெள்ளைக் குட்டி” எண்டு நினைச்சுக் கொண்டிருக்கையிலேயே, தமிழ் தொலைக்காட்சியில் “நியூஸ் அலர்ட்” லோகோ சுத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. பூனைக்குட்டியிலிருந்த கவனம் டீவியை நோக்கித் திரும்பியது.

“இவன்கள், இந்த டீவியை வச்சுக் கொண்டு படுற பாடு. இந்த வீணாப் போன விளம்பரங்களையும், இதையும் தானே சுத்திச் சுத்திக் காட்டுறான்கள். ஒரு பாட்டையாவது முழுசாப் போடுறான்களா. டெலிபோன் கதைக்கிறப்போ சொல்லனடா தம்பி” என்று வசைபாடிக் கொண்டே பக்கத்து வீட்டு அம்மம்மா எழும்பினா. செய்தி போற நேரம் தான் அவக்கு இடைவேளை. அந்த நேரம் அவட அவசர, அவசிய வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பவும் நிகழ்ச்சி தொடங்க வந்திருந்து பார்ப்பது வழக்கம். அவங்கட வீட்டில டீவி இருந்தாலும், தனியா இருந்து பார்க்க அம்மம்மாவுக்குப் பிடிக்கிறதில்லை.

நியூஸ் அலர்ட்டில வன்னியிலிருந்து வந்து குவியிர மக்களைக் காட்டுறப்ப கண்ணுக்குள்ள இருந்து முட்டக் கண்ணீர்த் துளி இரண்டு நிலத்தில விழுந்து தெறித்தது. தாயில்லாம, தகப்பனில்லாம, ஒவ்வொரு உயிரும், மற்றொரு துணையையிழந்து, இழக்கிறதுக்கும், தொலைக்கிறதுக்கும் ஒண்ணுமில்லாத சீவன்கள் கை, கால்களை இழந்து கீழ கத்திக்கொண்டிருக்கும் பூனைக்குட்டி மாதிரி அனாதரவாய் நிக்கிறதப் பார்த்தா யாருக்குத் தான் துக்கம் தொண்டையை அடைக்காது. வன்னிப் பெருநிலத்தின் மக்கள் நிலையைக் கண்ட சனமெல்லாம் ஒரே அதே கதையைக் கதைத்துக் கொண்டு ரோட்டுல இங்கையும் அங்கையும் கூடிக் கூடிக் கதைக்குதுகள். பூனைக்குட்டியும் போறவார ஆக்களுக்குப் பின்னால இங்கையும் அங்கையும் கத்திக்கொண்டே ஓடித்திரிந்தது.

எங்கட மனிதாபிமானக் கதைகள் வன்னி மக்களையும் கடந்து,கடல் கடந்து எத்தியோப்பியா வரை போய் முடிகையில் பூனைக்குட்டி உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தது. பின்னேரம் ஆறு மணியாயும் ஆயிட்டு. மின்னல் வெட்டோடும், இடிச் சத்தத்தோடும் அரசியல் நிகழ்ச்சியொன்று டீவியில தொடங்க வெளியில மழையும் தூறத் தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் “டிங் டாங்” சின்னத்தில் எலக்சன் கேட்ட பச்சோந்தி சேகர் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு வன்னி மக்களுக்கு தனது நீலிக்கண்ணீரை சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா “ 83கலவர நேரம் பல தோட்டங்களை எரிச்சதுக்கு இவனுக்கு பரிசாக் கிடைச்சது தானாம் இந்த பதவி, பவுசெல்லாம். ஆடு நனையுதுன்னு ஏன் இந்த ஓநாய் அழுகுது?” எண்டு தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தா.

கடைசி வார்த்தையைக் கேட்டதும் மண்டைக்குள்ள பொறிதட்ட பூனைக்குட்டி நனையுதேன்னு எட்டிப் பார்த்தேன். தொப்பலா நனஞ்சு போய், எல்லாத்தையும் இழந்த தமிழ்ச்சனம் மாதிரி கூனிக் குறுகி களச்சுப் போய் நிக்குது. கொஞ்சம் உசாரானதும், குட பிடிச்சுக்கொண்டு போற வாற ஆக்களுக்குப் பின்னால எல்லாம் கத்திக்கொண்டே ஓடித்திரியுது.

பொறுமையிழந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் சீனாக்கிழவியின் வீட்டிற்கு முன் நின்ற பூனக்குட்டியைத் தூக்கிக் கொண்டுவந்து மெதுவாகத் துவட்டி விட்டு, பாலைக் கரைத்துக் குடிக்கக் கொடுத்தேன். குட்டிக்கு பாலைக் குடிக்கக் கூடத் தெரியலை. பால் மூக்குக்குள்ள போக, கொஞ்ச நேரம் தும்மியது. மத்தியானத்திலயிருந்து அது ஒண்டும் சாப்பிடாததாலயோ, இல்ல சுத்தியும் ஆக்களப் பார்த்த பயத்தினாலயோ தெரியல. இன்னும் சத்தமாகக் கத்தித் தொலைத்தது. பூனைக்குட்டியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கையில் “டொக்…டொக்” என்று கதவு தட்டும் சத்தம் கேக்க முன்னறைக்குப் போய் திறந்து பார்த்தால், கீழ்வீட்டு சீனாக்கிழவி.

“ வாங்க ஆச்சி, என்ன இந்த நேரத்தில” என்றேன்.

“பூனைக்குட்டி வளக்கிறீங்களா மகன்?” என்று சகோதர மொழியில் கேட்டவாறே உள்ளே வந்தா. இவ கதைச்சது, குட்டிக்கு விளங்கியது போல கதவருகே கத்திக்கொண்டே ஓடிவந்தது. “நீங்க வளருங்க தம்பி, எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா இதைச் சத்தம் போட வேணாமெண்டு சொல்லுங்க, எங்களுக்கு இரவைக்கு நித்திரை கொள்ள முடியாது. அப்படிச் செய்ய முடியாட்டி வேறெங்கயாவது கொண்டுபோய் விட்டிருங்க.”என்று தொடர்ந்தாள்.

“என்னது பூனைக்குட்டி நாங்க வளக்குறோமா?” எனக்குள் எழுந்த கோவத்தை வெளிப்படுத்த முனைகையில், அம்மம்மாவும் என் கையைப் புடிச்சுச் சொன்னா “விட்டிடு மகன். இதுக்கு சாப்பிடக் கூடத் தெரியல்ல. எப்பிடிடா வளர்ப்பாய்”

மத்தியானத்திலிருந்து மனிதாபிமானத்தை பற்றி விளாசித் தள்ளிக் கொண்டிருந்த எனது நண்பர்களும் “ஓம் மச்சான்” என்று வழிமொழிய பத்திரமாகக் கீழே கொண்டு போய் வேறு இரண்டு பெரிய பூனைகளுக்கு அருகில் விட்டு வந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருபூனை மெதுவாக வந்து குட்டியை மணந்து பார்த்து, தன் நாக்கால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே எங்கிருந்தோ பாய்ந்து வந்த வெறிபிடித்த தெருநாய் டக்கென்று குட்டியின் கழுத்தைக் கௌவி ஒரு உலுப்பு உலுப்பியது.

பூனைக்குட்டி, ஒரு சிறு குழந்தையின் குரலை ஒத்த ஓசையுடன் கத்தி ஓய்ந்தது. ஒரு கிழிந்த வெல்வெட் துணியில் சிவப்பு மையை ஊற்றியது போல கிடந்த அதன் உடலில் மெல்ல மெல்ல மூச்சு என் கண் முன்னால் அடங்கியது.

இப்போது மனிதாபிமானிகள் பலர் மழைக்குள் குடைபிடித்த படியே பூனைக்குட்டியைச் சுற்றி நின்று தங்களுக்குள் மனிதாபிமானக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சீனாக் கிழவி “உச்” கொட்டிக்கொண்டே மேல்நோக்கிப் பார்த்தா. ஜன்னலருகே கண்ணீரோடு நின்ற என்னட்ட சொன்னா “மகன், நீங்க வளர்த்த பூனைக்குட்டி தான் எங்கட வீட்டுக்கு முன்னால செத்துக் கிடக்குது, இதை அப்புறப்படுத்துங்கள் என்று…

டீவியில மறுபடியும் “நியூஸ் அலர்ட்” லோகோ சுத்திக்கொண்டு வருகிறது..

நன்றி:
#ஜீவநதி
#தமிழ் ஓதர்ஸ்
#தமிழ்விசை
# ஈழத்து சிறுகதைகள்

புதன், ஜூன் 01, 2011

மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்



கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே

நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து

சென்றேன் அந்தச்
செம்மொழி அருகில்

வந்தனம் என்றேன்
வாய்மொழி இல்லை

கண்டும் காணாமல்
நிற்காமல் செல்லுமிவள்
நிலவின் மகளோ

நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்
தீண்டாமல் செல்கிறாளே
நீரின் உறவோ

தொடர்ந்தேன் பின்னால்
தொழுதேன் கண்ணால்

அமர்ந்தேன் அந்த
அமிர்தம் அருகில்

**

தாயின் கையைத்
தட்டி எழுந்தவள்
தாமரைப் பூக்களாய்
வெட்டி மலர்ந்தாள்

“போதும் போதும்”
போகலாம் என்ற
அன்னையை முறைத்து
அருகினில் வந்தாள்

போறோம் நாங்க
நீங்களும் போங்க

இதழ்கள் பிரித்து
இருவரி உதிர்த்து
அரிவரிச் சிறுமியாய்
மறைந்தவள் போனாள்

***

சிந்தையை விட்டுச்
சிதற மறுக்கும்
மங்கையைக் கண்டு
மாதங்கள் இரண்டு

மறுபடி அவளைக்
காணும் நாள் வரை
மனதினை வதைக்கும்
கனவுகள் திரண்டு

***

தேய்பிறையோ,
வளர்பிறையோ
தெரியாத நிலவு அவள்

அடைமழையோ
இடி புயலோ
அறியாத அல்லி அவள்

***

புன்னகையின் தேவதையாய்
பூமியிலே பிறந்தவளே
என்னபிழை நான் செய்தேன்
ஏனென்னை வெறுக்கின்றாய்

காணாமல் நானிருந்தால்
கணமொன்றில் இறந்திடுவேன்
நோய்கொண்டு போகுமுன்னே
நானுன்னைக் காண வேண்டும்

***

என்
பாசமுள்ள பூமகளே

வாசலிலே கண்டவுடன்
வாங்கப்பா என்காமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்டு
அம்மா அம்மாவென
அரற்றி அழுதவளே

அச்சம் வேண்டாம்

பிச்சைக்காரனோ
பிள்ளை பிடிப்பவனோ
அச்சம் அறியாத – இளம்
ஆண்மகனோ நானில்லை

அப்பா…
நானுன் அப்பா

சீதனச் சீரழிவால்
சிதறிய நம் குடும்பம்
சீதேவி உன்னாலே
சீராக வரம் வேண்டும்

வாசலிலே கண்டவுடன்
வாங்க என்று சொல்லாமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்ட
என்
செல்ல மகளே -உன்னைச்
சீராட்ட வரம் வேண்டும்

================
கவிதையின் ஒலிப்பதிவு: இங்கே
==================

குறிப்பு:

மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதல் லெப்பை அவர்களை நினைவுறுத்தும் முகமாக சக்தி பண்பலையில் இடம்பெற்ற கவிராத்திரி நிகழ்விற்காக “மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்” என கொடுக்கப்பட்ட தலைப்பிற்காக எழுதப்பட்ட கவிதை… இக்கவி வரிகள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை 1967 இல் வெளியிட்ட “செய்நம்பு நாச்சியார் மாண்மியம்” எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், மே 31, 2011

நேயம்



தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

நன்றி:
#கீற்று

திங்கள், மே 30, 2011

பிச்சை



பிச்சைக்காரர்களுக்கோ
போர்
இடப்பெயர்வு
ஊனம்
இயலாமை
கந்தலுடை மனைவி
பசியோடிருக்கும் மகன்
பருவமெய்திய ஏழாவது மகளென
ஆயிரம் காரணங்கள்
பிச்சையெடுக்க

நடத்துநர்களுக்கோ
ஒன்றே ஒன்று தான்
“சில்லறையில்லை”

கற்பிழந்த கதை


விடுமுறையில் கூட

வேலைக்குச் சென்றாய்…

உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்


அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்


காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்


கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்


ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்


அதுதான்,
“நீ கற்பிழந்ததையும் – உன்
கடவுள் கைவிட்டதையும்”

வியாழன், மே 26, 2011

அக்குரோணி: மன்னார் அமுதனின் கவிதை நூல் -- நன்றி: மருத்துவக் கலாநிதி. எம்.கே.முருகானந்தன்


மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.

இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது. பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.

இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன் இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.

தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.

‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார்.

இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

புதன், மே 25, 2011

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்”

படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியால் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன.

இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர்.

அத்தகைய ஆர்வமும், படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட இளைஞன் கலாமணி பரணீதரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பே “மீண்டும் துளிர்ப்போம்”. பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசியப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகிய தனது சிறுகதைகளைத் தொகுத்து “தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் சிறுசஞ்சிகைகளே” எனும் வாக்கிற்கு வலிமை சேர்த்திருக்கின்றார். பரணீதரன் சிறுகதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, இசை நாடகம் என பல்கலையிலும் தன் பன்முக ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ”இலக்கியமும் எதிர்காலமும்“ எனும் கட்டுரைத்தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். கதையாசிரியரால் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கிய மாசிகையான ஜீவநதி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளைகளைப் பரப்பி வற்றாத நதியாக வலம் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மீண்டும் துளிர்ப்போம் - சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 13 கதைகளும் சமூக விமர்சங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தனிமனித மாற்றத்தின் ஊடாக குடும்ப மாற்றத்தையும் அதனூடாக சமூக மாற்றத்தையும் வலியுறுத்தும் கதாசிரியர், உயிரிலும் மேலானது, பொய்முகங்கள் போன்ற கதைகள் சாதித் தடிப்பானது எவ்வாறு பெற்ற பிள்ளைகளுக்கும், அவர்களது ஒன்றுமறியா பால்ய நண்பர்களுக்கும் கூடக் குடமுடைத்து கொள்ளி வைத்து விடுகிறது என்பதை

“டேய்! எனக்கு எந்தக் கதையும் சொல்லாதை, முடிவாக் கேக்கிறன். அவளை விட்டுட்டு நீ வாறியோ? அப்படி வாராய் என்றால் உன்னை வெளியாலை எடுக்கிறம்” -- (உயிரிலும் மேலானது)

“நாலு எழுத்துப் படிச்சவுடனே எங்கட வீடுகளுக்குள்ளே வரப்பாக்குதுகள். என்ரை வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்க விடுவனே... என்ன தந்திரமாக அதுகளைக் கடத்தி விட்டேன் பாத்தியோ!” - (பொய்முகங்கள்)

செவ்வாய், மே 24, 2011

நான் படித்த அக்குரோணி


குறிப்பு: நான் படித்த அக்குரோணி  -- நன்றி கவித்தோழன் முகமட் பஸ்லி
கணிணியுகம் என்று வர்ணிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் என்னதான் எல்லாத்துறைகளும் கணிணிமயப்படுத்தப்பட்டு இயந்திரங்களின் துணைகொண்டு இயங்கிக் கொண்டிருந்தபோதிலும் மனிதனின் வேலைப்பளு குறைந்ததாகத் தெரியவில்லை. இன்று இயந்திரங்களிலும் வேகமாக மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லவேண்டும். இவ்வாறு உலகின் சுழற்ச்சிக்கேற்ப முழு முயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் மனதுக்கு நல்ல ஓய்வும் தேவைப்படுகிறது. சிறந்த ஓய்வு கிடைக்கும்போதே மறுநாள் அவனால் புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை ஆரம்பிக்க முடியும். இதனால்தான் மனிதன் பெரிதும் அமைதியை நாடுகிறான். மன அமைதியைப் பெறுவதற்காக அவன் எத்தனையோ முயற்சிகளை எடுக்கிறான், எங்கெங்கெல்லாமோ செல்கிறான். இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, ஆசை, பொறாமை இப்படி பலவகை அம்சங்களினால் கனத்து நிறம்பும் மனதுக்கு கவிதைகள் நல்ல ஆறுதலை வழங்குகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது உண்மை என்றே நான் கருதுகிறேன். இந்த ஆறுதல் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்துள்ளது. அன்மையில் மன்னார் அமுதனின் அக்குரோனி கவிதைத் தொகுதியை வாசிக்கும் போது மீண்டும் ஒரு முறை இந்த உணர்வினை அனுபவிக்கக் கூடியதாயிருந்தது.


கவிதை என்றால் என்ன? என்பதில் மூத்த பெரும் கவிஞர்களிடத்திலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தமக்குரிய பாணியில் வித்தியாசமான விளக்கங்களைத் தருவது கொண்டு  கவிதைக்கு பொதுவான ஒரு வரைவிலக்கணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ கவிதை என்னும் போது அதில் கட்டாயமாக கவிநயம் இருக்கவேண்டும் வெறுமனே வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டு போவதால் அது கவிதையாகிவிடாது. கவிதை காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் பல வடிவங்களால் தன்னை அழங்கரித்துக் கொள்கிறது. மரபு, புது, நவீனம், ஹைக்கூ என்று எந்த வடிவில் கவிதைகள் எழுதப்பட்டாலும் அதில் பொதிந்திருக்கும் கவித்துவ அழகினைப் பொறுத்தே அவை வாசகர் மனதில் இடம்பிடிக்கின்றன. சில கவிதைகளை சந்தங்கள் அழகுபடுத்துகின்றன.

மறுபக்கம் – பாலியல்


மதுவோடும் மாதோடும்
சூதாடும் மன்மதனின்
கதையெங்கும் காமம் தெறிக்கும்

பகலென்ன இரவென்ன
படுக்கைக்கு போய் விட்டால்
விரல் பத்தும் தேகம் கிழிக்கும்

நாடோடி போலாகி
தேடோடிப் பெண் சுகத்தை
எழுத்திலே கருக விடுவான்

கோடிட்டுக் கோடிட்டுக்
கோமானே அவனென்று
போற்றியவன் படித்துக் கெடுவான்

பாலியலின் பலபக்கம்
அறிந்தவனாய்ப் பகட்டுபவன்
நாளொன்றில் மணமுடிப்பான்

ஊசியிலே நுழையாத
நூலொன்றைக் காவியவன்
இல்லறத்தில் விரதமென்பான்

போருக்கு ஆகாத
வாளொன்றை அழகிடையில்
அணிதற்கு அவள் மறுப்பாள்

உலகினிலே பரத்தைகளை
உறவினிலே வென்றவனை
உற்றதுணை தோற்கடிப்பாள்

வெள்ளி, மே 20, 2011

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்

சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்

பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…

தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…

நீயில்லாத பயணங்களில்


நீயில்லாத பயணங்களில்
முழு இருக்கையில்
முக்கால் இருக்கையை
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்

எவனையோ
அலைபேசியில் அழைத்து
ஆரிப் நல்லவனென
நற்சான்றழிக்கிறான்

இரால் வடையையும்
இஞ்சிக் கோப்பியையும்
சத்தம் கேட்குமாறு
சப்பித் தின்றுவிட்டு

உன்னைச் சுமந்த
என் தோள்களில்
தூங்கிப் போகிறான்

பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை வாய் எச்சியை
என்னில் துடைத்துக்கொண்டே
மீண்டும் அலைபேசுகிறான்

யாரோ ஒருத்தியையும்
அவள் தாயையும்
தமக்கையையும்
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்

எதுவுமே உறைக்காமல்
உனக்குப் பிடித்த
சாளரக் கம்பிகளில்
முகம் புதைக்கிறேன்

என்னைப் போலவே
உணர்வற்று
பள்ளம், மேடுகளில்
ஊர்கிறது பேருந்து

நீயற்ற தனிமைப் பயணத்தில்…


மலையகத்தின்
உறை குளிரில்

தோள்களில் சாய…
கைகளைப்
பிணைத்துச் சூடேற்றி…
தலைமுடி கோதி
காதருகே முடி சுழற்றி

காதலோடு
கழுத்தில் முத்தமிட…
எவரும் இங்கு தயாரில்லை

இடையிடையே
நாசி தொடும்
மண் மணத்தில்
உனை நினைக்க

நாம் உச்சரிக்க மறந்த
வார்த்தைகளை மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறது
நம் காதல்

வியாழன், மே 19, 2011

அக்குரோணி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


மன்னார் அமுதன் எழுதிய அக்குரோணி என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் விட்டு விடுதலை காண் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே மன்னார் எழுத்தாளர் பேரவை வெளியீடாக, 86 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 50 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தொகுதியில் தமிழ்மீது கொண்ட பற்று, மானிட நேயம், ஆன்மீகம், காதல், சமூகம், தனி மனித உணர்வுகள், போர்ச்சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன. கவிஞர் மன்னார் அமுதன் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் போன்ற இரு வடிவங்களிலும் தனது கவிதை உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஊரின் பெயரையும் இணைத்து மன்னார் அமுதன்  என்ற பெயரில் எழுதி வருகின்றார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளர்கள் வரிசையில் மன்னார் அமுதனுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது.

'இலக்கிய வடிவங்களில் ஒரு மொழியின் உச்சத்தை உணர்த்தக் கூடியது கவிதையே. கவிதையைச் சிறப்பாகக் கையாளக் கூடிய கவிஞர்களும் உள்ளனர். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரம் உள்ள கவிஞர்களும் உள்ளனர். கவிதையை முழு ஆக்கத்திறனோடு படைக்க முயலும்போது அம்முயற்சி வெற்றி பெறும். உள்ளார்ந்த ஆக்கத்திறனைக் கலைத்துவத்தோடு வெளிப்படுத்தும் போது சிறந்த இலக்கியப் படைப்புக்கள் உருவாகும். அதற்குப் பரந்த வாசிப்பும், பயிற்சியும் உறுதுணையாக அமையும்.

அதென்னப்பா அக்குரோணி – அலசுகிறார் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


பத்து வார்த்தைகளில் நம்முடன் பேசும் ஒரு நல்ல கவிதை நம்மில் ஏற்படுத்தும் சிந்தனைகளை எழுதுவதற்கும் அதனை நயந்து பேசுவதற்கும் பத்தாயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. வாசகனின் சிந்தனையை எவ்வளவு தூரத்துக்கு ஒரு கவிதை பரத்தி விசாலித்துச் செல்கிறதோ அந்தளவுக்கு அந்தக் கவிதை சிறப்புப் பெற்று விடுகிறது. நாம் படித்த ஒரு நல்ல கவிதையின் சில வரிகள், சில வார்த்தைகள், அதன் ஞாபகங்கள் இன்னும் நம் மனத்துள் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்றால் அது அந்தக் கவிதைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும் கிடைத்து விட்ட வெற்றி என்று தயங்காமல் சொல்லி விடலாம்.

ஒவ்வொரு நல்ல கவிதைக்கும் அழகான உடலும் உற்சாகமான உறுப்புகளும் தெளிவான பேச்சும் நளினம் கொண்ட கவர்ச்சியும் அமரத்துவம் பெற்ற சுவாசமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அவ்வாறாக கவிதைகள் ஒரு போதும் மறக்கப்படுவதுமில்லை, மரித்துப்போவதும் இல்லை. அவற்றை ஒளித்து வைக்கவும் முடிவதில்லை, ஒழித்துக் கட்டவும் முடிவதில்லை. அவை சாகா வரம் கொண்டு சாசுவதமாக வாழும் வரத்தைத் தாமாகவே பெற்றுக் கொள்வதுடன் தன்னைப் படைத்த கவிஞனையும் காலாதி காலத்துக்கும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. இதைத்தான் “எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று கண்ணதாசன் குறிப்பிட்டார்.

இவ்வாறான