மன்னார் அமுதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னார் அமுதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், மார்ச் 11, 2013
இராத்தங்காத ஓர் இரவு
லேபிள்கள்:
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வெள்ளி, பிப்ரவரி 15, 2013
அழுக்குக் குறிப்புகள்
அழ(ழுக்)குக் குறிப்புகள்
கிழிசல் உடைகள்
வெட்டாத நகங்கள்
மூக்கு முடிகளென
எங்கும் அழுக்கு
பெருவிருட்சத்தின்
விழுதுகளாய்
தொங்கிக் கிடக்கிறது
சடையும் தாடியும்
வெட்டப்பட்ட விரல்கள்
சீழ் வடியும் புண்களென
நெளிந்து கிடக்கிறது
அவன் அன்றாடம்
குடலைக் குமட்டும்
அழுக்குகளின்
திரட்சியாய் அவன்..
விலகிக்
கடந்து செல்கையில்
அழுக்காகி விடுகிறது மனசு
காவிப்பல் தெரிய
நட்பாய் சிரிக்கையில்
அழகாகிவிடுகிறான் அவன்...
-- மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன்
புதன், பிப்ரவரி 06, 2013
தந்தையாயிருத்தல்
அவருக்கும் எனக்குமான
உறவுச் சுவரில்
வேர் பரப்பியிருந்தது
விரிசல்
ஒரு முறையேனும்
முறை சொல்லி
அழைத்ததாய் நினைவில்லை
கடந்த காலங்களில்
மீசை அரும்பாதவரை
கக்கத்தில் முகம்
புதைத்துக் கிடந்ததைச்
சொல்கிறாள் அம்மா
எனது
வெற்றிகளுக்காக
தோல்விகளைத் தோளில்
சுமந்தவனென்கிறாள்
பாட்டி
என்
மதிப்பெண்களை
கல்லூரிகளுக்கு
காவித் திரிந்ததில்
அவரின்
கால் செருப்பு அறுந்த
கதை சொல்கிறாள் தங்கை
சேக்காளிகளோடு
சண்டைபிடித்து
மண்டையுடைந்து வந்தபோது
மருந்திட்டதை ஞாபகப்படுத்துகிறான்
தம்பி
புறக்கணிப்பின்
எல்லாக் கணங்களிலும்
அவர் தந்தையாய் இருந்தார்
நான்தான்
கயிறை அறுக்கும்
கன்றுக்குட்டியாய்..
-- மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன்
செவ்வாய், ஜனவரி 29, 2013
கோயிலும் கடவுளும்
அந்நாட்களில்
ஏழைகளின்
கூடாரமாயிருந்தது
கோயில்
கடவுள்
காவலாயிருந்தார்
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்
அப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்
நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்
கடவுள் அங்கேயே
காவலாயிருந்தார்
தன்னை
நியாயப்படுத்த
எல்லாவற்றையும்
கற்றுத் தந்திருந்தது மதம்
மேலானவர்களைத் துதித்தோம்
கீழானவர்களைத் துவம்சித்தோம்
தோற்றம் மாறியிருந்தார்
கடவுள்
தூண்களைக் கட்டியும்
தூசிகள் தட்டியும்
பாரம்பரியக் கோவிலைப்
பராமரித்தோம்
மழைக்கு ஒதுங்கிய
மக்களையும்
மஞ்சள் படிந்த
கடவுளையும் வெளியேற்றிவிட்டு
-- மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன்
வியாழன், ஜனவரி 24, 2013
நானற்ற பொழுதுகளில்
நீ
முட்டியை மடக்கி
முகத்தில் குத்தியதில்
முத்திரை குத்தப்பட்ட
கடிதத்தைப் போலவே
கிழிந்து போயிருந்தது
என் தாடை
மருந்திடச் சொல்கிறாய்
முட்டிக்கு
பெண்ணென்றான பின்
பெரிதாய் என்ன செய்திடுவாய்
எல்லா இராணுவங்களும்
செய்ததைவிட
அடுப்படியில் கூட
எனக்கான
கருத்தோ கொள்கையோ
கருக்ககட்டக் கூடாதெனும்
கொள்கையோடே வாழ்கிறாய்
விதிமுறைகளை
என்னிடமும்
விதிவிலக்குகளை
எல்லோரிடமும்
பேசுபவனே
எழுதி முடிக்கப்பட்ட
கவிதையிலிருந்து
தூக்கி வீசப்பட்ட
சொற்களைப் போலவே
நிராகரிக்கப்பட்டிருப்பாய்
நானற்ற பொழுதுகளில்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன்
செவ்வாய், ஜனவரி 22, 2013
தேவதைகளின் தனிமை
நீயென்னைத்
தனித்திருந்த
நாட்கள் நான்கும்
நரகங்களாகிப் போயின
பார்க்கும் பொம்மைகளில்
கூட நிழலாடியது
உன் முகம்
அதிகாலை அணைப்பும்
முத்தமும் சிணுங்கலும்
எதுவுமற்று விடிந்திருந்தது
வாழ்க்கை
உன்னை வந்தடைந்த
ஐந்தாம் நாள் காலையில்
ஊர்க்குருவிகளோடும்
ஓட்டுப்பல்லிகளோடும்
தோட்டத்துப் பூக்களோடும்
பேசிக்கொண்டிருந்தாய்
மனிதர்கள் அற்ற
தனிமைப் பெருவெளியில்
நீ
மகிழ்ச்சியோடு
மட்டுமேயிருந்தாய்
கண்டவுடன்
பொம்மைகளைப் புறமொதுக்கி
கட்டிக்கொண்டாய்
அக்கணத்தில்
அர்த்தப்படுத்தியிருந்தாய்
என்
வாழ்க்கையையும்
தனிமையையும்
லேபிள்கள்:
கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
ஞாயிறு, ஜனவரி 20, 2013
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்
கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்
என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.
அவனும் நானும்
ஆணாகவே இருந்தோம்
இருந்தும்
அவன் மேன்மையானவனானான்
திருடனென்றாலும்
உமக்கு
வலப்பக்கம் வீற்றிருக்கும்
திருடனாய்
அவன் மேன்மையானவனானான்
கடைச்சரக்கா இலக்கியமென
காணுமிடமெலாம்
பேசித் திளைப்பதில்
அவன் மேன்மையானவனானான்
எனது வாயை
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள்
அவன் மேன்மையானவனென
கலாச்சார உடையில்
வெள்ளையும் கறுப்புமான
மேன்மையானவனே
தயக்கம் வேண்டாம்
சேலையும் கலாச்சார உடைதான்
ஒருமுறை அணிந்துபார்
அழகாய்த்தானிருக்கும்
கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்
என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.
லேபிள்கள்:
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்
செவ்வாய், டிசம்பர் 04, 2012
சோல்ஜர் @ சொறிநாய்
சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு
காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்
அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்
வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்
சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்
காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்
லேபிள்கள்:
கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
திங்கள், நவம்பர் 26, 2012
முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”
முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”
-- மன்னார் அமுதன்
தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார். சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.
-- மன்னார் அமுதன்
தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார். சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.
நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. பொருளாதாரத் தேடலில் குடும்ப உறவுகளையே தொலைத்து நிற்கும் தோழர்களுக்கு மத்தியில் உற்ற துணைக்கு முன்னுரிமை அளித்து காதல் கவிதைகளை வார்த்துள்ளார் கவிஞர். பெரும்பாலான எழுத்தாளர்கள் முதலில் எழுதத் தொடங்குவது கவிதையைத் தான்... காதலைத் தான்... காலம் போற்றும் காதலைக் கருவாய்க் கொண்டு “அழகிய இராட்சசி” எனும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.
ஒருவரின் மீது வைத்திருக்கும் காதலை எழுத்தின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ கூறிவிட வேண்டும். இதயங்களுக்கிடையே பகிரப்படாத எத்தனையோ காதல்கள் இன்றும் ஏக்கப் பெருமூச்சுகளோடே சுற்றித் திரிகின்றன. பகிரப்படாத அன்பு பெறுமதியற்றதாகி விடுகின்றது. ஒருவரை எவ்வளவு நேசிக்கின்றோம் என்பதை அடிக்கடி செயல்களின் மூலம் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு உணர்த்தப் பிரயத்தனப்படும், ஒரு பகிரப்பட்ட ஒரு காதலின் தொகுப்பாகவே கவிஞர் சுரேஷ்குமாரின் அழகிய இராட்சசியை நான் பார்க்கிறேன்.
மிக எளிய நடையில், அனைவருக்கும் விளங்கும் வகையில் ““சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்ற பாரதியின் வாக்கிக்கேற்ப கவிதைகளைப் படைத்துள்ளார் சுரேஷ்குமார்.
“கவிதை என்பது உணர்ச்சியின் உதிரப் பெருக்கு. தன்னுள் பெருக்கெடுத்த உணர்வுகளைத், தான் நன்றாக அனுபவித்து, அதனை உட்கொண்டு பிரசவிப்பவன் தான் கவிஞன். கவிதை என்பதுஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்பளிப்புகள்” என்பான் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த். சுரேஷ்குமாரின் உள்ளத்து உணர்வுகள் கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. யதார்த்தமான உவமைகளைக் கையாண்டு கவிதைகளுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். நான் ரசித்த அவருடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
“அரிசி மண்ணெண்ணெய்
வாங்க வரிசையில்
முண்டியடிக்கும் ஜனங்களைப் போலவே
முண்டியடித்து நிற்கின்றன
என் கனவுகள்”
‘கண்ணாடியைப் பார்த்து
உன்னழகை சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னைப் பார்த்து
தங்களின் அழகை
சரிசெய்து கொள்கின்றனர்”
அழகு என்பது எங்கு உள்ளது என்பது இன்றுவரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என்பதை நாம் அறிந்திருந்தாலும், மற்றொருவர் பார்த்து தம்மைத் திருத்திக் கொள்ளும் வகையில்
‘என் கன்னக்குழிகளில்
ஊற்றி வைத்திருக்கின்றேன்
நீ கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை”
தேநீர் அருந்திய
கோப்பையை எறிந்துவிடாதே
இதழ்கள் பட்ட
கோப்பையின்
ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம் காதல்
காதலில் வென்றவர்கள் சாதனை படைக்கிறார்கள். காதலில் தோற்றவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள் என்பார்கள். காதல் எவரையும் வீழ விடுவதில்லை. பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயத்தில் அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை நினைவு படுத்துவதற்காக வெளியிடப்படும் இந்நூலோடு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு இன்னும் பல நூல்களைப் படைத்து கவியுலகில் அழியாத சுவடுகளை கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார் பதிக்க வேண்டுமெனெ மனமாற வாழ்த்துகின்றேன்.
#அழகிய ராட்சசி கவிதை நூலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து
லேபிள்கள்:
கட்டுரைகள்,
நூலறிமுகம்,
நூலாய்வு,
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வெள்ளி, பிப்ரவரி 03, 2012
சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்
காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்
கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்
கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது
கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை
ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை
தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை
வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்
லேபிள்கள்:
கவிதைகள்,
சுதந்திரம்,
மன்னார் அமுதன்
திங்கள், டிசம்பர் 05, 2011
மணியக்கா
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்
-- நா.காமராசன் -கறுப்பு மலர்கள்
மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி... கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்.... இதயம் உருக்குதடி....என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பது போல் இன்று இந்த ஊர் மக்களின் ரெக்கார்ட் டான்ஸ் மேடையில் ஆடுகிறாள்.
மணியக்கா முறையாகப் பயின்ற நடனமங்கையாய் இருப்பாள் என யாருமே அறிந்திருக்கவில்லை. ஊரே வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தது. விமலனும் கண்வெட்டாமல் மணியக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். வானிலிருந்து விழுந்து தெறிக்கும் ஆலங்கட்டிகளைப் போல வண்ண ஒளிகள் மணியக்காவின் மீது விழுந்து உருண்டு ஓடியது.
அவள் இடுப்பின் நெளிவும், மேல் துணியின் விலகலும் விமலனுக்குள் ஹார்மோனைத் தூண்டியது. குடித்திருந்த சாராயம் மணியக்கா சொன்ன அண்ணாச்சியின் சேட்டைகளை நினைத்து நினைத்து அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டம் முடியட்டும் என்று விமலன் பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தான்.
-----------------------
மணியக்காவை முதன்முதலில் பார்த்த போது விமலனுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோளில் ஒரு கை விழுந்து நெல்லூருக்கு எம்புட்டு தூரம் என்ற போது விமலன் திடுக்கிட்டுட்டான். பக்கத்தில் வாய் நிறைய வெற்றிலையும், நெற்றியில் பெரிய பொட்டும், பாவாடைக்குப் பதில் வேட்டியும், இரண்டு நாள் மீசை தாடியும் பின்னப்பட்ட தலைமுடியுமாக ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாள். ஒன்னுக்கொன்னு முரணா இருந்தாலும் கண்ணுல ஒளியும், முகத்துல ஒரு தேஜசும் இல்லாம இல்ல. நாலாவது இறக்கம் என்று விட்டேத்தியாய் சொல்லிவிட்டு திரும்பி மறுபக்கம் இருந்தவனிடம் வாடகைக்கு வீடு புடிக்க முடியுமா என்றாள். எண்ணங்களுக்குள் மூழ்கிக் கிடந்த விமலனுக்கு அவள் குரல் குளிக்கப் போகும் பௌபு செட்டுக் கிணத்துக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.
ஒரு துளி விமலனில் தெறிக்க தலையை உலுப்பித் திரும்பிப் பார்த்தான். அவள் அவனையே பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பேரு என்றான். சுப்பிரமணி, மணியக்கானு கூப்பிடுவாக என்றாள்.
--------------
வேப்பங்குளத்துள ஒரு பெரிய வீடு வந்திருக்கு.கான்ராக்ட் எடுத்தாச்சு, வேலையாள் மட்டும் தான் பாக்கி. விமலா நீயும் வாறியா என்று பெயிண்டர் அண்ணாச்சி கேக்கும் போதே விமலன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தயாராகினான். முன்னாடி போயிட்டிரு விமலா. மாரியம்மன் கோயில் முக்குல நில்லு. இன்னும் ரெண்டாள பாத்து கூட்டியாந்திடுறன்னு போன அண்ணாச்சி அரை மணிநேரம் கழித்து மணியக்காவையும், சேகரையும் கூட்டிக் கொண்டு வந்துட்டிருந்தார்.
சைக்கிள் பாரில் ஒரு காலைப் போட்டுக் கொண்டு ஒரு காலால் ஊன்றி நின்று வேப்பமரத்தில் ஓடிக்கொண்டிருந்த அணில்களைப் பார்த்துக் கொண்டிருந்த விமலனுக்கு மணியக்காவைப் பார்த்ததும் கால்கள் வலுவிழந்து நிலத்தில் சரிவது போல இருந்தது. என்ன விமலா நாறின மீன நாயி பாக்காப்ல பாக்க... அதுவும் உன்னப்போல ரெண்டுங்கெட்டான் தான் என்ற அண்ணாச்சியின் தொனியில் நக்கல் தூக்கலாக இருந்தது.
முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரை அடக்கியபடி நா.. ஒன்னும் அப்டி இல்ல அண்ணாச்சி. சும்மா வாய்க்கு வந்தத பேசி ஆளுக முன்னாடி அவமானப் படுத்தாதிக என்று மட்டுமே விமலனால் சொல்ல முடிந்தது. அண்ணாச்சி விமலனைப் பற்றிச் சொன்ன தகவல் மணியக்காவிற்கு புதிதாக இருந்தது. ரொம்பத் தான் அலுத்துக்குறடே. அண்ணாச்சி இல்லாததையா சொல்லிட்டாக நீ ஆம்பளனா நாலு அடி நெளியாம நடந்து காட்டு என அண்ணாச்சியோடு சேர்ந்து கொண்டான் சேகர்.
அண்ணாச்சி வேலை கொடுக்கிறீக எங்கிறதுக்காக எது வேணும்ணானும் பேசலாம்னு நினைச்சிக்கிடாதிக. இந்த வேலை இல்லன்னா இன்னொரு வேலை. சின்னப் பயல அழ வைச்சிப் பாக்காதீக என்று மணியக்கா சொல்ல விமலனுக்கு மணியக்காவின் மீது முதல் முறையாக மரியாதை வந்தது.
உனக்கென்ன மணி. வாயிருக்கு .. பிழச்சுக்குவ. நம்மால அப்டியெல்லாம் முடியாது. பெயிண்ட் அடிச்சா தான் சோறு. பேசிகிட்டே நிக்காம நீயும் விமலனுமா அந்த கதைவுகளையும் சுவரையும் சாண்ட் பேப்பர் போட்டு தேச்சிருங்க. சேகரு சுண்ணாம்பை வடிச்சு நீலத்தைக் கலந்து ஒரு கோட்டிங் அடிச்சிட்டிருடேன்னு சொல்லிட்டே அண்ணாச்சி சைக்கிள எடுத்துட்டு கிளம்பிட்டாரு. அண்ணாச்சி திரும்ப வரும் போது மப்புல தான் வருவார்னும் விமலனுக்குத் தெரியும்.
அண்ணாச்சியோடு வெள்ளையடிக்க வருவது அவனுக்கு இது முதல் முறையில்ல. அண்ணாச்சிக்கு ஆள் கிடைக்கலன்னா விமலனையும் சேத்துக்குவார். விமலனுக்கு முக்காச் சம்பளம் குடுத்தாப் போதும். மேலதிகமா வேணும்னு கேட்கக் தெரியாதவன்.மேற்பார்வைக்கு ஆளில்லைனாலும் குடுத்த வேலையை செய்வான். இப்புடி எத்தன பேரு சம்பளத்த புடிச்சுகிட்டு குடுத்தாலும் புள்ளபேறுக்கு போயிருக்கிற அண்ணாச்சி பொண்டாட்டிக்கு பத்தவே பத்தாது.அவ வயிரும் வத்தவே வத்தாது.
ஆளில்லாத வீட்டில் ஆளுக்கொரு மூலையில் நின்று வேலை செய்வது ரெண்டு பேருக்குமே சங்கடமாக இருந்தது. யாரு முதலில் பேசுறதுன்னு யோசித்துக் கொண்டிருக்கும் போதே விமலன் தும்மினான். விமலா மூக்க மறைச்சு துண்ட கட்டிக்கோ. தூசியால்ல இருக்கு என சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் மணியக்கா.
இரண்டாம் நாளிலேயே நீண்ட கால நண்பர்களைப் போல இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டே சைக்கிளில் போகும் போது ”ரெண்டுங் கெட்டான் ரெண்டும் ஒண்ணா போகுது.. இவனுக முகத்துல முழிச்சா உருப்பட்டாப் போல தான் என்று தொப்பையைத் தள்ளிக்கொண்டே போனார் தலையாரி.
தனக்குள் ஏற்படும் எதிரும் புதிருமான எண்ண அலைகளை மணியக்காவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என விமலன் நினைத்தாலும் கூச்சம் தடுத்தது. எப்படியாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக மணியக்கா, நீ நல்லா உயரமா ஆம்பளை மாதிரி தானே இருக்கிற, பிறகெதுக்கு பொம்பிளை மாதிரி நடந்துக்குற என்றான்.
கேட்டுக் கேட்டு புளிச்சுப் போய் எரிச்சல் படுத்துற கேள்வியா இருந்தாலும் அறிஞ்சுக்கனும்னு கேக்கிறவனுக்கு சொல்றது தானே நியாயம்னு மணிக்கு தோணிச்சு. பிறக்கிறப்போவும், வளர்றப்போவும் நானும் உன்ன மாதிரி ஆம்பிளயா தான் இருந்தேன். போக போக மனசோட ஆசை அதிகமாகி மூளையை கட்டிப் போட்டிருச்சு. நானும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு தான் முயற்சி பன்றேன். முடியலயே. மூளை தோத்துருது..ஆசை ஜெயிச்சுருது.
மனுசனோட வேறுவேறான குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக இருக்கும். இதுல 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்படாத மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்தும். கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் சம்பந்தப்பட்டவை. அது எக்ஸ் எக்ஸ் என்று ஆண்களிலும் எக்ஸ் வை என்று பெண்களிலும் இருக்கும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது எக்ஸ் மற்றும் வை ஆகவும், பெண்களில் இரண்டு எக்ஸ்களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் எக்ஸ்சும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து ரெண்டு எக்ஸ் குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் வையும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து எக்ஸ்வை குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். ஒரு எக்ஸ் அல்லது ஒரு வை குரோமோசோம் அதிகமாகிவிட்டால் அந்தக் குழந்தை என்னைப் போல் பிறந்துவிடுகிறது.ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிஞ்சிரலாம். ஆனா திருநங்கை என்பதை ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடையும் பதிமூனு வயசிக்கு மேல தான் கண்டுபிடிக்கலாம்ன்னு அறிவியல் விளக்கமும் குடுத்தா மணியக்கா. ஆனா அது ஒன்னும் விமலனுக்குப் புரிவதாக இல்லை.மணியக்கா பேசிட்டிருக்கிறப்பவே சாராய நெடியோடு அண்ணாச்சி உள்ளே நுழைந்தார்.
வாங்குற சம்பளத்துக்கு வேலை செஞ்சா தான் உடம்புல ஒட்டும். ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக்கு. பேசிட்டே நின்னு பழகினா உடம்பு தினவெடுத்திரும் விமலா. வேலை செய்ய வளையாது. மணி நீ மேல வா, வேலையிருக்குனு சொல்லிட்டே அண்ணாச்சி மாடிப்படியேறி மேல் அறைக்குள் போனார். பின்னாலயே மணியும் போனா. போன வேகத்துலயே திரும்பின மணி நீ எல்லாம் மனுசனாடா.இப்புடிப் பொழைக்கிறதுக்கு சாகலாம்னு அண்ணாச்சியை வசைபாடிகிட்டே மாடிப்படிகளில் கீழிறங்கினாள்.
பின்னாலேயே ஓடி வந்த வந்த அண்ணாச்சி பாதிப் படிகளிலேயே மணியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆரஞ்சு மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் சிறு குழந்தையைப் போல கெஞ்சினார். புரிஞ்சுக்கோ மணி.. பொண்டாட்டி வேற ஊரில இல்ல. சம்பளத்துல வேணும்னா இருபது ரூபா கூட்டித் தாறேன். மண்ணு தின்னுற உடம்ப மனுசன் தின்னுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு.அப்புடியே காப்பாத்தி வச்சு நீ யாருக்கு குடுக்கப் போறனு சொல்லிட்டே மணியக்காவை மேல் மாடிக்கு இழுத்துட்டுப் போனார்.
இதே போல தான் விமலன் பம்பு செட்டுல குளிச்சுட்டு இருக்கிறப்போ அங்க வந்த தலையாரி கிணத்துக்குள் குதிச்சு குளிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்துல விமலா நீச்சல் தெரியுமாடே உனக்குன்னு கேட்டவரிடம் எட்டிப் பார்த்து இல்லையென்று தலையாட்டினான். நீச்சல் தெரியாதவன்லாம் ஆம்பளையாடா . வா நா நீச்சல் பழக்கி விடுறேன்னு கூப்பிட தண்ணிக்குப் பயந்து படிகளில் இறங்கினான் விமலன்.
பயப்படாதடே இறங்கி வா நா இருக்கன்லே.. முதல்ல தண்ணிப் பயம் போகனும். பயப்படாம குதிச்சிரு.. முங்க விடாம நா தூக்கிடுறன்னு தலையாரி கரிசனையாய் சொல்ல விமலனும் குதித்தான். குதிச்சதும் தண்ணி வாய் மூக்கெல்லாம் போயி நாசியில ஏற மூச்செடுக்க முடியாமல் ஒரு நிமிடத்தில் சாவு இப்புடித் தான் வரும் போல என விமலன் நினைத்துக் கொண்டான். அதற்குள் தலையாரி விமலனின் முடியைப் புடிச்சு இழுத்து கடைசிப் படியில போட்டார். தலையாரி தொப்பையை நீருக்கு மேல் விட்டு ஒரு தவளை தலைகீழாய்க் கிடப்பது போல் மிதப்பதை பார்க்கும் போது விமலனுக்கும் நீச்சலை எப்படியாவது பழகிரனும்னு வைராக்கியம் வந்துருச்சு. மூச்சிரைப்பு அடங்கியதும் படியில புடிச்சுக்கிட்டே காலை மட்டும் அடிக்கத் தொடங்கினான். அதைப் பார்த்து பெரிதாய் சிரித்த தலையாரி தண்ணிக்குள்ள வந்தாத் தானுடா நீச்சல் பழகலாம்.என் கையப் புடிச்சுக்கோன்னு சொல்லி விமலனை நடுக்கிணத்துக்கு கூட்டிட்டு போயி அவன் எதிர்பார்க்காதப்போ இறுக்கி உதட்டோடு உதடு பதித்தார்.
சீய் விடுய்யா மானங்கெட்டவனேன்னு விமலன் உதறித் தள்ளி தண்ணிக்குள் மூழ்கி மூச்சுத் திணறி ஒரு கல்லைப் பிடித்து படியேறும் போது தலையாரி கட்டியிருந்த துண்டு விமலனின் கையில் இருந்தது.தலையாரி எதுவும் நடக்காதது போல் சிரித்துக் கொண்டே போகப் போக பழகிரும் வான்னு சொல்ல அருவருப்பாய் பார்த்த விமலன் துண்டைத் தூக்கி அவன் மேல் எறிந்துவிட்டு படியேறினான்.
படியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க இறங்கி வந்த அண்ணாச்சி நின்னுட்டே கனவு காணுறியோடே, இன்னைக்குள்ள தேய்ப்பு வேலையை முடிச்சுடனுன்னு சொல்லிட்டே போனார்.மணியக்காவுக்கு என்ன ஆயிருக்கும்னு அறிய விமலன் மாடிக்கு ஓடினான். அங்க மணியக்கா குப்புறக் கிடந்தா. விமலனைக் கண்டதும் உடையை ஒதுக்கியபடி எழுந்து கழிப்பறைக்குள் போனாள். உதடு கொஞ்சம் வீங்கியிருந்தது. பிறகு அன்றைய நாள் முழுவதும் ரெண்டு பேருமே பேசிக்கல.
வேலை முடிந்தும் இருவரும் பேசிக் கொள்ளாமலேயே வந்தார்கள்.விமலனின் வீட்டைக் கடக்கும் போது அப்பறங்காட்டி வீட்டுக்கு வா விமலா, ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு மணியக்கா சொல்ல அதைக் கேட்டுக்கொண்டு நின்ற விமலனின் அம்மா சேர்க்கை சரியா இருந்தாத் தானடே நீ சரியா இருப்ப. இப்புடி ரெண்டுங் கெட்டாங் கூட திரியறதுக்கா ஒத்தப் பிள்ளையப் பெத்தன். நீ பசங்க கூட திரியறது தானே. எதுக்கு இது கூடல்லாம் சேருறன்னு கத்தினா.
எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னபடியே விமலனும், எதையுமே கேட்காதது போல மணியக்காவும் ஆளுக்கொரு பக்கமாய் போனார்கள். குளிச்சு, சாப்பிட்டுட்டு கொஞ்சம் இருட்ட ஆரம்பிக்க மணியக்கா வீட்டுக்குப் போனான் விமலன். மணியக்கா நல்லா குடிச்சுட்டு கிறங்கிய கண்களுடன் வீட்டிற்கு வெளியில் இருந்தாள். விமலனைக் கண்டதும் நா குழற எதோ சொல்லிவிட்டு கைகளை ஆட்டி பக்கத்தில் கூப்பிட்டாள். அவனுக்குள் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா. முதலில் வேண்டாம் என மறுத்த விமலன் பிறகு மணந்து பார்த்துவிட்டு வாங்கிக் குடிச்சுட்டு மாங்காய் ஊறுகாயையும் முறுக்கையும் கடித்தான்.
மாடியில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படியாவது அறிய வேண்டும் எனும் துடிப்பில் விமலன் காலையில் விட்ட கதையின் மீதியை மணியக்காவிடம் கேட்டான். மணியக்காவிற்கும் ஏதாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆலய குருக்களா இருந்த அப்பாவுக்கு சேவை செய்ய கோயிலுக்குப் போனது, சங்கீதம், நாட்டியம் படிச்சது, முதல் முறையா சேலையோடு தன்னை பார்த்த தகப்பனார் கோயில் ஆனையின் காலில் கொண்டு போய் கட்டி விட்டது, காப்பாத்துறன் பேர்வழின்னு கூட்டிட்டுப் போய் இரவு முழுக்க தூங்க விடாம இம்சை பண்ணின சின்னக் குருக்கள் என்று எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மணியக்கா சொன்னா.
விமலனும் தன் பங்குக்கு தனக்கு நடந்த சில சம்பவங்களையும் சொல்லி அழுதான். அழாதடா விமலா. எல்லாரும் குரோமோசோம் மாற்றத்தால இப்படி ஆகிறதில்ல.. சில பேர் வளர்ப்புலயும், முறையான பாலியல் கல்வி இல்லாததாலயும் இலகுவாக் கிடைக்கிற கலவி இன்பத்துக் அடிமைப்பட்டும் மனசளவில தன்னை ஒரு பெண்ணா நம்புறதாலயும் இப்படியாயிடுறாங்க. சம்போகிச்சு சுகம் அனுபவிக்கிற வரைக்கும் ஒவ்வொரு ஆம்பளையும் தன்னைத் தானே சந்தேகப்பட்டுக் கொண்டுதான் இருப்பான். ஆம்பளயாவோ பொம்பிளையாவோ பிறந்தா சந்தோசப்படனும்டா விமலா. அத விட்டுட்டு இவனுக நான் தான் பெருசு, நீ தான் பெருசுன்னு சண்டை போட்டுட்டே செத்துப் போயிடறானுக. வாழ்க்கையில நமக்கு ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரியறப்போ தான் அதன் வலியை உணர முடியும்.
எல்லாரையும் போல புருசன் வேணும், புள்ள வேணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இவனுக எல்லாம் சம்போகிக்க மட்டும் தானே வருவானுக. இவனுகளுக்கு அன்புன்னா என்னன்னே தெரிய மாட்டேங்குது. தெரிஞ்சிருந்தாலும் அதை ஏன் என்கிட்ட காட்ட மாட்டேனுறானுக. நல்ல சினேகிதனாக் கூட பழக ஒருத்தனுக்கும் மனசில்லையே விமலா. நீ என் கூட சிநேகிதனா இருப்பியா, என் மேல அன்பா இருக்கியான்னு போதை உச்சத்துக்கு ஏற மணியக்கா விமலனிடம் அலம்பிக் கொண்டே கையை நீட்டி சத்தியம் செய்யச் சொன்னாள். விமலன் சத்தியம் செய்தபடி அவள் கையைப் பிடித்து எழுப்பி வா ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு கூட்டிட்டுப் போனான்.
--
மணியக்கா ஆடிக் களைத்து மேடையில் நிற்கையில் ஒரு இரசிகக் குடிமகன் தள்ளாடிக் கொண்டே மேடையில் ஏறி மணியக்காவின் நெஞ்சுச் சட்டையில் 100 ரூபாயைச் செருவிட்டு விசிலடித்துக் கொண்டே இறங்கினான். அவன் பின்னாலேயே மணியக்காவும் தள்ளாடிக் கொண்ட இறங்க தலையாரியும் அண்ணாச்சியும் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.அண்ணாச்சி தலையாரியிடம் சொல்லியிருப்பான். தலையாரி பல்லைக் காட்டிக் கொண்டே மணி எனக்காக நீ வீட்டுக்கு ஒருக்க வந்து ஆடனும், வெளிநாட்டு சரக்கு வாங்கி வெச்சிருக்கேன்னு தலையைச் சொறிந்தார்.
அண்ணாச்சியையும் தலையாரியையும் இடித்துக்கொண்டு நடுவில் புகுந்த விமலன் சொருகிய கண்களோடு வா போகலாம் என மணியக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். அந்தப் பிடி அண்ணாச்சி காலையில் பிடித்து இழுத்ததைப் போலவே இருந்தது. கைய விடு விமலா என உதறி முடியாமல் போகவே விமலனின் பின்னால் போனாள் மணியக்கா.
நீ வா, நா சொல்றேன்னு பிடியைத் தளர்த்தாமல் இழுத்துப் போனான் விமலன். மணியக்கா ஆடும் போது வண்ண விளக்குகளில் மின்னித் தெறித்த அங்கங்கள் அவனுக்கு திரும்பத் திரும்ப கண்ணுக்குள் வந்தது. கொஞ்ச தூரம் இழுத்துப்போன விமலன் எதிர்ப்பட்ட மரத்தின் மறைவில் மணியக்காவை தள்ளினான். நடக்கப் போவதை புரிந்து கொண்ட மணியக்கா, விமலா நீ சத்தியம் பண்ணினடா, மறந்துட்டியா, நாம சிநேகிதனுகடாண்ணூ ஏக்கத்தோடு முணங்கிக் கொண்டே விழுந்தாள்.
---*------*------
--ஆக்கம்: மன்னார் அமுதன்---
நன்றி:ஜீவநதி-டிசம்பர்
லேபிள்கள்:
சிறுகதைகள்,
திருநங்கை,
மணியக்கா,
மன்னார் அமுதன்
திங்கள், அக்டோபர் 17, 2011
கே.எஸ். சிவகுமாரன் - பவழவிழா நாயகன்
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை நூல்களாகவும் தொகுத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல்மிக்க இவர், பத்தி எழுத்து எனும் பதத்திற்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க கே.எஸ்.சிவகுமாரனுக்கு இலக்கிய உலகில் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பது பல இலக்கியவாதிகளின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.
2007 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் சர்வதேச இலக்கியம் தொடர்பான தேசிய கற்கை நெறியொன்றை பகுதி நேரமாகக் கற்றுக் கொண்டிருக்கும் போது தான் கே.எஸ்.சிவகுமாரனுடைய நூல்கள் எனக்குப் பரிட்சயமாயின. கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் பார்வையாளார்கள் பக்கத்தின் முன்னிருக்கையில் கே.எஸ்.சிவகுமாரனைக் கண்ட நாட்களில் அவரோடு பேசும் சந்தர்ப்பம் மிக அரிதாகவே கிடைத்தது. எல்லோராலும் அறியப்பட்ட திறனாய்வாளராக இருந்தாலும் அவரது தன்னடக்கமும், பணிவும், இளைஞர்களோடு உரையாடுவதில் உள்ள ஆர்வமும் நாளடைவில் என்னைப் போன்ற பல இளைஞர்களை அவரை நோக்கி ஈர்த்தது. இளம் எழுத்தாளர்களை நாங்கள் வளர்த்துவிடுகின்றோம் என்று மேடைக்கு ,மேடை முழங்கிவிட்டு அடுத்தமேடையில் நடு இருக்கையை பிடிக்க ஓடும் தன்னிறைவடையாத இலக்கியவாதிகளுக்கும், கணணி வைத்திருப்பவனெல்லாம் இன்று இலக்கியவாதியாகி விடுகின்றான் என்று மேடைக்கு மேடை வெம்புவோருக்கும் மத்தியில் இளைய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், புதிய சிந்தனைகளையும் வாசிப்பதோடு மட்டுமில்லாமல், தனது ஆக்கபூர்வமான பின்னூட்டம் மூலம் அவர்களை உக்குவித்தும் வருபவர் சிவகுமாரன்.
2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சொன்னாற் போல -01” எனும் நூலில் “மற்றொரு இளைஞர் குழாமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தாம் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து சலிப்படைவது போலத் தெரிகிறது. ஆயினும், சந்தர்ப்பமளிக்கப்படும் போதும் இவர்களின் புதிய சிந்தனைகளை “மரபுவழித் திறனாய்வோர்” அங்கீகரிக்கும் பட்சத்திலும் பொது நீரோடையில் இணைந்து இவர்களும் சங்கமித்து ஆக்கபூர்வமாகச் செயற்படுவர்” (புதிய விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும் - பக்-7) என இளைய தலைமுறையின் மீதான தனது நம்பிக்கையைப் பகர்கின்றார்.
சொன்னாற் போல 1, 2 மற்றும் மூன்று ஆகிய மூன்று நூல்களுமே கலை, இலக்கியம் தொடர்பான ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் பெயர்களும், அவர்கள் வெளியிட்ட நூல்களின் பெயர்களும் மாணவர்களுக்கும், விமர்சகர்களுக்கும் உசாத்துணை நூல்களாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
பவளவிழா நாயகனின் தன்னடக்கத்திற்கு மற்றுமொரு சான்று “இலக்கிய வகைமை ஒப்பாய்வு” எனும் பத்தி எழுத்தில் காணப்படுகிறது. அதில் “இந்தப் பத்தியில் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் சொல்ல நேர்ந்திருக்கிறது. தன்னடக்க, இன்றிச் சுயபுராணமாய் இது இருக்கின்றது என நம்மில் சிலர் நினைக்கக் கூடும்.. ஆனால், என்ன செய்வது வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்படும் பொழுது, நாமே நமது சுயவிபரத்தைப் பொருத்தமறிந்து சொல்வதில் தப்பில்லை என நினைக்கின்றேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என வாசகர்களிடம் கருத்துக் கேட்கிறார்.
உண்மைதான்... வரலாற்றில் இருட்டடிப்புச் செய்வதில் வல்லவர்கள் சில திறனாய்வாளர்கள்... கட்டுரைகளின் ஆழம் அதிகரிப்பதற்கு அதில் சேகரிக்கப்பட்ட உண்மைத் தகவல்களை (fact) உள்ளீடு செய்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ அல்லது மாவட்டத்திலோ இயங்கி வந்த எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிக்கும்போது அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். ஓரிருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு, (மற்றவர்களின் பெயரை மறந்து விட்டேன்)என அடைப்புக்குள் போடுவதே ஒரு இலக்கிய இருட்டடிப்புத் தான். அவ்வாறு முற்று முழுதான தகவல்கள் கிடைக்காத போது எவருடைய பெயரையும் குறிக்காமல் விடுவது சிறப்பு. இத்தகையவர்களின் இருட்டடிப்புச் செயல்பாடுகள் தான், இலக்கியவாதி தன்னைத் தானே புகழ்ந்து எழுத வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.
Critic என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு விமர்சகர், திறனாய்வாளர், நடுநிலையறிஞர்.. என இன்னும் பல தமிழ்ப் பதங்கள் உள்ள போதிலும் தன்னை ஒரு திறனாய்வாளர் என்று கூறி கொள்வதை விரும்பும் சிவகுமாரன், விமர்சகர் எனும் பதத்தை கண்டனக்காரர் என்று கூறுகின்றார். நூலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் எழுதப்படும் விளம்பர மதிப்பீட்டுரைகள் இலக்கியத்தின் நேர்மறையான பக்கத்தை மட்டும் விபரித்துக் கொண்டு சென்றுவிடும். விமர்சனநோக்கில் எடுத்துரைக்கப்படும் நடுநிலை மதிப்பீடுகளே தீவிர இலக்கியத்தின் தூண்களாக உள்ளன. இலக்கியத்தின் வளர்ச்சியும், இலக்கியவாதியின் வளர்ச்சியும் நடுநிலை மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு திருத்தும் நிலையைச் சார்ந்துள்ளது.
மேலும் இவரது நூலின் மூலம் துணிகர எழுத்தாளர்களான சிவரமணி, செல்வநிதி தியாகராஜா, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் பேராசிரியை ரஜினி திரணகம போன்றவர்களின் தகவல்களையும், ஈழத்தின் முன்னோடி நாவலாசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவருமான பிரான்ஸ் கிங்பெரி அடிகளாரைப் பற்றிய தகவல்களையும் அறியக்கூடியதாக உள்ளது. ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள் - திறனாய்வு, திறனாய்வு - அண்மைக்கால ஈழத்து சிறுகதைகள் ஆகிய நூல்கள் சிறந்த சிறுகதைகளைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கும், வளர்ந்து வரும் திறனாய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூலாக அமையும்.
மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். திறனாய்வு எனும் பெயரில் நூலின் அணிந்துரையை மீண்டும் எழுதாமல் படைப்புகளின் உட்கருத்துக்களை விவாதிக்கும் மகத்தான மனிதரான பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவாகுமாரன் அவர்கள் இன்னும் பல நூல்களை வரலாற்றில் பதிக்க வேண்டும்.
லேபிள்கள்:
கட்டுரைகள்,
மன்னார் அமுதன்
புதன், செப்டம்பர் 28, 2011
நெஞ்சிற்கு நீதி
கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக் காலம் வெல்லும்
கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான மனிதர்தம் பாதம் தொட்டு - நல்ல
மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்
பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில் ஒருபுறம் நீதி தவழும்
# கொழும்பு சட்ட மாணவர் தமிழ் மன்றம் -2011 வெளியிட்ட நீதிமுரசிற்காக எழுதிய கவிதை
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
மன்னார் அமுதன்
புதன், ஜூன் 29, 2011
வா மணப்போம் விதவை
வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்
ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக்கியெம்
பூவையும் பொட்டையும்
இழந்தோம் - நம்வீட்டு
பூவைக்கு பூவைப்பார் யார்
புண்ணதுவே புண்ணாக
இருக்கட்டும் நெஞ்சத்தில்
மண்ணுக்காய் இல்லாமல்
மாண்டவென் தோழர்க்காய்
வென்றே தரவேண்டும்
விரைவாக சந்ததியை
வா மணப்போம் விதவை
இறுதித் தருவாயில்
உயிர்நீத்த உடற்கெல்லாம்
சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க்
கிடந்த உடலேறிச்
சுகம்கண்ட காடையரின்
பண்பாட்டைப் பார்த்தே பழகு
ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட பூமியினை
பூண்டோடு அழித்துப்
புன்னகையைச் சீரழித்தீர்
மாண்டோ போனோம்
மறவர்நாம் - வடலிகள்
மீண்டும் வானுயரும்
நன்றி:
# பொங்குதமிழ்
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல்,
மன்னார் அமுதன்
வெள்ளி, ஜூன் 03, 2011
“மனிதாபிமானிகள் ” – சிறுகதை
“மியாவ்…”, “மியாவ்…” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங்கள் மனிதாபிமானம் தொடர்பான உரையாடலை இடைநிறுத்த மரக்கதிரையிலிருந்து எழும்பி வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன்.
“ஐயோ பாவம், அழகான வெள்ளைக் குட்டி” எண்டு நினைச்சுக் கொண்டிருக்கையிலேயே, தமிழ் தொலைக்காட்சியில் “நியூஸ் அலர்ட்” லோகோ சுத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. பூனைக்குட்டியிலிருந்த கவனம் டீவியை நோக்கித் திரும்பியது.
“இவன்கள், இந்த டீவியை வச்சுக் கொண்டு படுற பாடு. இந்த வீணாப் போன விளம்பரங்களையும், இதையும் தானே சுத்திச் சுத்திக் காட்டுறான்கள். ஒரு பாட்டையாவது முழுசாப் போடுறான்களா. டெலிபோன் கதைக்கிறப்போ சொல்லனடா தம்பி” என்று வசைபாடிக் கொண்டே பக்கத்து வீட்டு அம்மம்மா எழும்பினா. செய்தி போற நேரம் தான் அவக்கு இடைவேளை. அந்த நேரம் அவட அவசர, அவசிய வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பவும் நிகழ்ச்சி தொடங்க வந்திருந்து பார்ப்பது வழக்கம். அவங்கட வீட்டில டீவி இருந்தாலும், தனியா இருந்து பார்க்க அம்மம்மாவுக்குப் பிடிக்கிறதில்லை.
நியூஸ் அலர்ட்டில வன்னியிலிருந்து வந்து குவியிர மக்களைக் காட்டுறப்ப கண்ணுக்குள்ள இருந்து முட்டக் கண்ணீர்த் துளி இரண்டு நிலத்தில விழுந்து தெறித்தது. தாயில்லாம, தகப்பனில்லாம, ஒவ்வொரு உயிரும், மற்றொரு துணையையிழந்து, இழக்கிறதுக்கும், தொலைக்கிறதுக்கும் ஒண்ணுமில்லாத சீவன்கள் கை, கால்களை இழந்து கீழ கத்திக்கொண்டிருக்கும் பூனைக்குட்டி மாதிரி அனாதரவாய் நிக்கிறதப் பார்த்தா யாருக்குத் தான் துக்கம் தொண்டையை அடைக்காது. வன்னிப் பெருநிலத்தின் மக்கள் நிலையைக் கண்ட சனமெல்லாம் ஒரே அதே கதையைக் கதைத்துக் கொண்டு ரோட்டுல இங்கையும் அங்கையும் கூடிக் கூடிக் கதைக்குதுகள். பூனைக்குட்டியும் போறவார ஆக்களுக்குப் பின்னால இங்கையும் அங்கையும் கத்திக்கொண்டே ஓடித்திரிந்தது.
எங்கட மனிதாபிமானக் கதைகள் வன்னி மக்களையும் கடந்து,கடல் கடந்து எத்தியோப்பியா வரை போய் முடிகையில் பூனைக்குட்டி உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தது. பின்னேரம் ஆறு மணியாயும் ஆயிட்டு. மின்னல் வெட்டோடும், இடிச் சத்தத்தோடும் அரசியல் நிகழ்ச்சியொன்று டீவியில தொடங்க வெளியில மழையும் தூறத் தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் “டிங் டாங்” சின்னத்தில் எலக்சன் கேட்ட பச்சோந்தி சேகர் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு வன்னி மக்களுக்கு தனது நீலிக்கண்ணீரை சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா “ 83கலவர நேரம் பல தோட்டங்களை எரிச்சதுக்கு இவனுக்கு பரிசாக் கிடைச்சது தானாம் இந்த பதவி, பவுசெல்லாம். ஆடு நனையுதுன்னு ஏன் இந்த ஓநாய் அழுகுது?” எண்டு தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தா.
கடைசி வார்த்தையைக் கேட்டதும் மண்டைக்குள்ள பொறிதட்ட பூனைக்குட்டி நனையுதேன்னு எட்டிப் பார்த்தேன். தொப்பலா நனஞ்சு போய், எல்லாத்தையும் இழந்த தமிழ்ச்சனம் மாதிரி கூனிக் குறுகி களச்சுப் போய் நிக்குது. கொஞ்சம் உசாரானதும், குட பிடிச்சுக்கொண்டு போற வாற ஆக்களுக்குப் பின்னால எல்லாம் கத்திக்கொண்டே ஓடித்திரியுது.
பொறுமையிழந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் சீனாக்கிழவியின் வீட்டிற்கு முன் நின்ற பூனக்குட்டியைத் தூக்கிக் கொண்டுவந்து மெதுவாகத் துவட்டி விட்டு, பாலைக் கரைத்துக் குடிக்கக் கொடுத்தேன். குட்டிக்கு பாலைக் குடிக்கக் கூடத் தெரியலை. பால் மூக்குக்குள்ள போக, கொஞ்ச நேரம் தும்மியது. மத்தியானத்திலயிருந்து அது ஒண்டும் சாப்பிடாததாலயோ, இல்ல சுத்தியும் ஆக்களப் பார்த்த பயத்தினாலயோ தெரியல. இன்னும் சத்தமாகக் கத்தித் தொலைத்தது. பூனைக்குட்டியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கையில் “டொக்…டொக்” என்று கதவு தட்டும் சத்தம் கேக்க முன்னறைக்குப் போய் திறந்து பார்த்தால், கீழ்வீட்டு சீனாக்கிழவி.
“ வாங்க ஆச்சி, என்ன இந்த நேரத்தில” என்றேன்.
“பூனைக்குட்டி வளக்கிறீங்களா மகன்?” என்று சகோதர மொழியில் கேட்டவாறே உள்ளே வந்தா. இவ கதைச்சது, குட்டிக்கு விளங்கியது போல கதவருகே கத்திக்கொண்டே ஓடிவந்தது. “நீங்க வளருங்க தம்பி, எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா இதைச் சத்தம் போட வேணாமெண்டு சொல்லுங்க, எங்களுக்கு இரவைக்கு நித்திரை கொள்ள முடியாது. அப்படிச் செய்ய முடியாட்டி வேறெங்கயாவது கொண்டுபோய் விட்டிருங்க.”என்று தொடர்ந்தாள்.
“என்னது பூனைக்குட்டி நாங்க வளக்குறோமா?” எனக்குள் எழுந்த கோவத்தை வெளிப்படுத்த முனைகையில், அம்மம்மாவும் என் கையைப் புடிச்சுச் சொன்னா “விட்டிடு மகன். இதுக்கு சாப்பிடக் கூடத் தெரியல்ல. எப்பிடிடா வளர்ப்பாய்”
மத்தியானத்திலிருந்து மனிதாபிமானத்தை பற்றி விளாசித் தள்ளிக் கொண்டிருந்த எனது நண்பர்களும் “ஓம் மச்சான்” என்று வழிமொழிய பத்திரமாகக் கீழே கொண்டு போய் வேறு இரண்டு பெரிய பூனைகளுக்கு அருகில் விட்டு வந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருபூனை மெதுவாக வந்து குட்டியை மணந்து பார்த்து, தன் நாக்கால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே எங்கிருந்தோ பாய்ந்து வந்த வெறிபிடித்த தெருநாய் டக்கென்று குட்டியின் கழுத்தைக் கௌவி ஒரு உலுப்பு உலுப்பியது.
பூனைக்குட்டி, ஒரு சிறு குழந்தையின் குரலை ஒத்த ஓசையுடன் கத்தி ஓய்ந்தது. ஒரு கிழிந்த வெல்வெட் துணியில் சிவப்பு மையை ஊற்றியது போல கிடந்த அதன் உடலில் மெல்ல மெல்ல மூச்சு என் கண் முன்னால் அடங்கியது.
இப்போது மனிதாபிமானிகள் பலர் மழைக்குள் குடைபிடித்த படியே பூனைக்குட்டியைச் சுற்றி நின்று தங்களுக்குள் மனிதாபிமானக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சீனாக் கிழவி “உச்” கொட்டிக்கொண்டே மேல்நோக்கிப் பார்த்தா. ஜன்னலருகே கண்ணீரோடு நின்ற என்னட்ட சொன்னா “மகன், நீங்க வளர்த்த பூனைக்குட்டி தான் எங்கட வீட்டுக்கு முன்னால செத்துக் கிடக்குது, இதை அப்புறப்படுத்துங்கள் என்று…
டீவியில மறுபடியும் “நியூஸ் அலர்ட்” லோகோ சுத்திக்கொண்டு வருகிறது..
நன்றி:
#ஜீவநதி
#தமிழ் ஓதர்ஸ்
#தமிழ்விசை
# ஈழத்து சிறுகதைகள்
லேபிள்கள்:
சிறுகதைகள்,
மன்னார் அமுதன்,
மனிதாபிமானிகள்
வியாழன், மே 26, 2011
அக்குரோணி: மன்னார் அமுதனின் கவிதை நூல் -- நன்றி: மருத்துவக் கலாநிதி. எம்.கே.முருகானந்தன்
மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.
இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது. பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.
இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன் இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.
தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.
‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார்.
இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.
லேபிள்கள்:
அக்குரோணி,
கட்டுரைகள்,
கவிதைகள்,
மன்னார் அமுதன்
செவ்வாய், மே 24, 2011
நான் படித்த அக்குரோணி
குறிப்பு: நான் படித்த அக்குரோணி -- நன்றி கவித்தோழன் முகமட் பஸ்லி
கணிணியுகம் என்று வர்ணிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் என்னதான் எல்லாத்துறைகளும் கணிணிமயப்படுத்தப்பட்டு இயந்திரங்களின் துணைகொண்டு இயங்கிக் கொண்டிருந்தபோதிலும் மனிதனின் வேலைப்பளு குறைந்ததாகத் தெரியவில்லை. இன்று இயந்திரங்களிலும் வேகமாக மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லவேண்டும். இவ்வாறு உலகின் சுழற்ச்சிக்கேற்ப முழு முயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் மனதுக்கு நல்ல ஓய்வும் தேவைப்படுகிறது. சிறந்த ஓய்வு கிடைக்கும்போதே மறுநாள் அவனால் புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை ஆரம்பிக்க முடியும். இதனால்தான் மனிதன் பெரிதும் அமைதியை நாடுகிறான். மன அமைதியைப் பெறுவதற்காக அவன் எத்தனையோ முயற்சிகளை எடுக்கிறான், எங்கெங்கெல்லாமோ செல்கிறான். இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, ஆசை, பொறாமை இப்படி பலவகை அம்சங்களினால் கனத்து நிறம்பும் மனதுக்கு கவிதைகள் நல்ல ஆறுதலை வழங்குகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது உண்மை என்றே நான் கருதுகிறேன். இந்த ஆறுதல் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்துள்ளது. அன்மையில் மன்னார் அமுதனின் அக்குரோனி கவிதைத் தொகுதியை வாசிக்கும் போது மீண்டும் ஒரு முறை இந்த உணர்வினை அனுபவிக்கக் கூடியதாயிருந்தது.
கவிதை என்றால் என்ன? என்பதில் மூத்த பெரும் கவிஞர்களிடத்திலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தமக்குரிய பாணியில் வித்தியாசமான விளக்கங்களைத் தருவது கொண்டு கவிதைக்கு பொதுவான ஒரு வரைவிலக்கணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ கவிதை என்னும் போது அதில் கட்டாயமாக கவிநயம் இருக்கவேண்டும் வெறுமனே வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டு போவதால் அது கவிதையாகிவிடாது. கவிதை காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் பல வடிவங்களால் தன்னை அழங்கரித்துக் கொள்கிறது. மரபு, புது, நவீனம், ஹைக்கூ என்று எந்த வடிவில் கவிதைகள் எழுதப்பட்டாலும் அதில் பொதிந்திருக்கும் கவித்துவ அழகினைப் பொறுத்தே அவை வாசகர் மனதில் இடம்பிடிக்கின்றன. சில கவிதைகளை சந்தங்கள் அழகுபடுத்துகின்றன.
லேபிள்கள்:
அக்குரோணி,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்
மறுபக்கம் – பாலியல்
மதுவோடும் மாதோடும்
சூதாடும் மன்மதனின்
கதையெங்கும் காமம் தெறிக்கும்
பகலென்ன இரவென்ன
படுக்கைக்கு போய் விட்டால்
விரல் பத்தும் தேகம் கிழிக்கும்
நாடோடி போலாகி
தேடோடிப் பெண் சுகத்தை
எழுத்திலே கருக விடுவான்
கோடிட்டுக் கோடிட்டுக்
கோமானே அவனென்று
போற்றியவன் படித்துக் கெடுவான்
பாலியலின் பலபக்கம்
அறிந்தவனாய்ப் பகட்டுபவன்
நாளொன்றில் மணமுடிப்பான்
ஊசியிலே நுழையாத
நூலொன்றைக் காவியவன்
இல்லறத்தில் விரதமென்பான்
போருக்கு ஆகாத
வாளொன்றை அழகிடையில்
அணிதற்கு அவள் மறுப்பாள்
உலகினிலே பரத்தைகளை
உறவினிலே வென்றவனை
உற்றதுணை தோற்கடிப்பாள்
லேபிள்கள்:
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
மன்னார் அமுதன்
வெள்ளி, மே 20, 2011
நீயில்லாத பயணங்களில்
நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்
சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்
பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…
தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…
லேபிள்கள்:
கட்டுரைகள்,
கவிதைகள்,
காதல் கவிதைகள்,
மன்னார் அமுதன்,
mannar amuthan
நீயில்லாத பயணங்களில்
நீயில்லாத பயணங்களில்
முழு இருக்கையில்
முக்கால் இருக்கையை
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்
எவனையோ
அலைபேசியில் அழைத்து
ஆரிப் நல்லவனென
நற்சான்றழிக்கிறான்
இரால் வடையையும்
இஞ்சிக் கோப்பியையும்
சத்தம் கேட்குமாறு
சப்பித் தின்றுவிட்டு
உன்னைச் சுமந்த
என் தோள்களில்
தூங்கிப் போகிறான்
பேய்க்கனவு கண்டதாய்
திடுக்கிட்டு
கடை வாய் எச்சியை
என்னில் துடைத்துக்கொண்டே
மீண்டும் அலைபேசுகிறான்
யாரோ ஒருத்தியையும்
அவள் தாயையும்
தமக்கையையும்
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்
எதுவுமே உறைக்காமல்
உனக்குப் பிடித்த
சாளரக் கம்பிகளில்
முகம் புதைக்கிறேன்
என்னைப் போலவே
உணர்வற்று
பள்ளம், மேடுகளில்
ஊர்கிறது பேருந்து
லேபிள்கள்:
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
மன்னார் அமுதன்,
mannar amuthan
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





